அமைச்சர்கள், முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை
மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மேலும் கசப்படைந்துள்ளது.
செளத் பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்திற்கு விரைந்த பிரதமர் மன் மோகன் சிங் அங்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் உளவுப்பிரிவு தலைவர்கள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடற்படைக்கு புதுக் கப்பல்கள், ரேடார்கள்:
முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி நடத்திய மற்றொரு ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வகையில், கடற்படைக்கு புதிய போர்க் கப்பல்கள், ரோந்துக் கப்பல்கள், அதி நவீன கண்காணிப்பு ரேடார்களை வாங்க தீர்மானிக்கப்பட்டது.
இதுதவிர கடலோரப் பகுதிகளை பாதுகாக்கும் வகையில், புதிய கடலோரக் காவல் படை நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் நடந்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலோரக் கண்காணிப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் அதி நவீன சாதனங்கள் வாங்கப்படவுள்ளன.
எதிரிகளின் கப்பல்கள் மற்றும் படகுகளை தடுத்து நிறுத்தி தாக்கும் அதி விரைவு தாக்குதல் படகுகள் உள்ளிட்டவை உடனடியாக வாங்கப்படவுள்ளன.
உலக சந்தையிலிருந்து 70 சிறிய மற்றும் பெரிய ரக கப்பல்களை குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை கடலோரக் காவல் படையிடம் வழங்கப்படும்.
தற்போது உள்ள 13 கடலோரக் காவல் படை நிலையங்கள் தவிர கூடுதலாக 9 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங், கடலோரக் காவல் படை இயக்குநர் அனில் சோப்ரா, இயக்குநர் (கொள்முதல்) சசி காந்த் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.