திருமங்கலம்-நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது
திருமங்கலம்: வரும் 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள திருமங்கலம் தொகுதியி் நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.
கடந்த 15ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி 22ம் தேதி முடிவடைந்தது. தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, அஇசமக உள்பட 26 பேர் வேட்பாளர்கள் உள்ளனர்.
கடந்த 2 வாரமாக இங்கு மிகத் தீவிரமாக பிரச்சாரம் நடந்து வந்தது. திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து முதல்வர் கருணாநிதி நேற்று பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அழகிரி தலைமையில் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கடந்த இரு வாரமாக இங்கேயே தங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்துக்கு ஆதரவாக ஜெயலலிதா கடந்த 3 நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று மாலை திருமங்கலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் திருமங்கலத்தில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனுக்காக அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபனுக்காக கட்சி தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் ராதிகா ஆகியோரும் தொகுதி முழுவதும் சுற்றி வருகின்றனர்.
திமுக, அதிமுக வேட்பாளர்களின் பண, படை பலத்தில் தேமுதிக, அஇசமக வேட்பாளர்களைத் தவிர சுயேச்சைகள் யாரும் வெளியிலேயே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் நாளை (7ம் தேதி) மாலை 5 மணியுடன் இந்தத் தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தலைவர்களும் இன்று உச்சக்கட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொகுதி முழுவதும் 190 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக துணை ராணுவம் வந்திறங்கியுள்ளது.
மின்னணு எந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு அவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொடிகள்-தோரணங்கள் அகற்றம்:
பிரச்சாரம் ஓய்வதையடுத்து அரசியல் கட்சிகளின் கொடிகள், தோரணங்கள், பேனர்கள், கட்-அவுட்டுகள், விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
திருமங்கலம் எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது.