இது 'தேர்தல் ரயில்வே' பட்ஜெட்: ஜெ.
சென்னை: நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் ரயில்வே பட்ஜெட் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ரயில்வே பட்ஜெட் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ரயில்வே மந்திரியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2009-2010-ம் ஆண்டிற்கான இடைக்கால ரெயில்வே பட்ஜெட் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு ஆரோக்கியமான மாற்றத்தையும் தேடுவது கடினம்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்திய ரெயில்வே 90 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை சேமித்துள்ளதாகவும், இது மிகப்பெரிய திருப்பமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதனைகள் என கூறப்படுபவை சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் மற்றும் நலிவடைந்த மக்களுக்கு போய் சேரவில்லை.
அதிகபட்ச வளர்ச்சி விகிதம் எட்டப்பட்டுள்ளதாக பதிவு செய்த போதிலும் 2009-2010 ஆண்டிற்கான திட்ட வரைவு சிறப்பு மிக்கதாக இல்லை.
இந்திய ரெயில்வே அதிக அளவு லாபம் ஈட்டியுள்ள நிலையிலும், டீசல் விலைக் குறைக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும் அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டணக்குறைப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில், சாதாரண மக்களின் நிலை எப்போதும் உள்ளது போல தொடருகிறது. சரக்கு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
2008-ம் ஆண்டில் தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இந்திய ரெயில்வே துறை பாதுகாப்பை பலப்படுத்தவும், நவீனப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
உபரி நிதி அதிகமாக இருப்பதாக ரெயில்வே தெரிவித்த போதிலும் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது வருத்தத்திற்குரியது.
2008-2009-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் புதிய ரெயில்கள், புதிய ரெயில் பாதைகள், அகலப்பாதையாக மாற்றும் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அந்த அறிவிப்புகள் அனைத்தும் ஏட்டளவில்தான் உள்ளன. வழக்கமான சம்பிரதாயமான அறிவிப்புகளாகவே தொடர்கின்றன.
சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான ரெயில் பாதை பல ஆண்டுகளாகவே ஆரம்ப கட்ட நிலையிலேயே இருப்பது துரதிருஷ்டவசமானது. நீண்ட காலமாக காலதாமதம் செய்து வருவதை ஏற்க முடியாதது.
90 ஆயிரம் கோடி உபரி நிதியை சேமித்துள்ளதாக ரெயில்வே மந்திரி கூறுகிறார். ஆனால் அவருடைய பதவி காலத்தில் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிக குறைவானது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.