ஜெ. பேச்சுக்கும் - உயர்நீதிமன்றக் கலவரத்துக்கும் தொடர்பு: அன்பழகன்
தமிழக சட்டமன்றத்தில் நேற்று, பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, அன்பழகன் பேசியதாவது:
எப்போதும் இல்லாத அளவுக்கு சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது, இந்த ஆட்சியை நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் அறிக்கை விட்டிருக்கிறார். அவருக்கு உரிமை உள்ளது. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
அவர் சொன்னதை மாற்றாதவர் என்று யாரும் கருத மாட்டார்கள். தனது கையெழுத்தையே இல்லை என்று சொன்னவர். பின்னர், அது தனது கையெழுத்துதான் என்று நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார்.
இந்த ஆட்சியை நீக்க சொல்லலாம். முதல்-அமைச்சர் விலக வேண்டும் என்று சொல்லலாம். சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. முன்பு, அவர் சொன்னதும் கையெழுத்திடக் கூடிய பிரதமர் இருந்ததுபோல் ஆதிக்கக் கொடி டெல்லியில் இப்போதும் பறப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
1957 முதல் இந்த சட்டப்பேரவையுடன் எனக்கு எப்படியோ தொடர்பு இருந்து வருகிறது என்ற முறையில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். எப்போதும் இல்லாத அளவுக்கு சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்படுகிறது. இப்போது நன்றாகத்தான் இருக்கிறது. அதனை குலைக்க முயல்பவர்கள் தலைகாட்டுகிறார்கள்.
ஐகோர்ட்டில் ஒரு ஆசாமி மீது முட்டை வீசப்பட்டதில் தொடங்கி, மறுநாள் கலவரம் நடந்தபோது, முட்டை வீசப்பட்ட சம்பவத்துக்காக ஏன் நடவடிக்கை இல்லை என்று நீதிமன்றத்தில் இருந்தே குரல் கிளம்பியது.
அதன்பிறகு, போலீஸ் அதிகாரிகளும், நீதிபதிகளும் கலந்து பேசி பாதுகாப்பு ஏற்பாடு செய்தார்கள். அந்த நேரத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று சொல்வதற்காக, சிலர் அங்கு கலவரத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். அன்று காலையில் ஒரு திருமணவிழாவில் மணமக்களை வாழ்த்துவதற்கு பதிலாக, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் பேசுகிறார்.
அதற்கும், இங்கே (ஐகோர்ட்டில்) கலவரம் நடைபெறுவதற்கிடையிலே ஒரு சங்கிலித் தொடர் இருப்பதை நான் நினைவூட்டுகிறேன். அவர்களது ஆசை நிறைவேறாது.
இந்த விஷயத்தில், அரசு, போலீஸ் பக்கமும் இல்லை. வக்கீல் பக்கமும் இல்லை. யார் பக்கமும் சேரவில்லை. நீதிபதிகள் ஆலோசனை கேட்டு அவர்கள் என்ன சொல்கிறார்களோ அப்படி நடங்கள் என்று அதிகாரிகளுக்கு சொல்லி, அதன்படி கலந்து பேசியே அமைச்சர் துரைமுருகனுக்கு அதிகாரிகள் தகவல் சொல்கிறார்கள்.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் இருந்தால் வக்கீல்கள் திருப்தி அடைவார்கள். காவல்துறைக்கு நீதிமன்றம் தவறு செய்யாது என்ற நம்பிக்கையில் நாங்களும் அவர்கள் ஆலோசனையை கேட்க சொல்லி இருக்கிறோம்.
வக்கீல்கள் படித்தவர்கள். அவர்கள், வக்கீல்கள் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். இடையில் யாரோ புகுந்துவிட்டார்கள் என்கிறார்கள். கருப்பு கோட் போட தகுதி இல்லாதவர்கள் சிலர் அங்கே புகுந்துள்ளார்கள். அவர்கள், ஜி.கே.மணி, திருமாவளவன் போன்றவர் பெயர்களை எல்லாம் பயன்படுத்துகிறார்கள்.
அங்கு வக்கீல்களிடமே வழக்கு நடத்தும் புரோக்கர் போன்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். வக்கீல்களுக்கு மத்தியில் படிக்காதவர்களும் புகுந்திருப்பதுதான் இந்த கலவரத்துக்கு காரணம்.
ஈழத்தை காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கும் நாம் தமிழகத்தையும் காப்பாற்ற தவறிவிடக்கூடாது என்றார் அன்பழகன்.