எல்டிடிஈ கொடிக்கு தடைவிதிக்க முடியாது!-கனடா
அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பல்வேறு நாடுகளில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் கனடா நாட்டிலும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப் புலிகளின் புலிக்கொடிகளை கையில் பிடித்து வந்து பங்கேற்றனர். விடுதலைப் புலிகள் கேட்கும் தனி ஈழத்தின் தேசியக் கொடி இது. தமிழ்தேசியக் கொடி என்று புலம் பெயர் தமிழர்கள் இதற்குப் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தக் கொடியை ஏந்தி போராட்டம் நடத்துமாறு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல கனடாவிலும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் விடுதலைப்புலிகளின் இந்தக் கொடி மற்றும் பிரபாகரன் படங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்ததற்கு இலங்கை அரசு அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
எனவே உலக அளவில் விடுதலைப்புலிகளின் கொடியைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு கருதுகிறது. எனவே இது குறித்து உலக நாடுகளிடம் தூதரகங்கள் மூலம் தெரிவித்து அந்த கொடிக்கு தடைவிதிக்க இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
கனடா, பெல்ஜியம், சுவிஸ் நாடுகளில் விடுதலைப்புலிகளின் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடர்ந்தால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகிவிடும். எனவே, இதை தடுக்க அந்த நாடுகளுடன் பேச்சு நடத்த தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது என்று இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியின் செயலாளர் பாலித கோன்ன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கனடா நாட்டின் காவல் துறை அதிகாரிகள், “விடுதலைப்புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும் அந்த கொடிகளை கொண்டு செல்வதை தடுக்க சட்டத்தில் இடம் இல்லை" என்று கூறி உள்ளனர்.
உணவுத் தட்டுப்பாடு; பட்டினியில் தமிழர்கள்:
இந்த நிலையில் இலங்கை தமிழர் பகுதியில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர் பகுதியில் சிங்கள அரசு உணவு பொருட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படுவான்கரை கடியனாது, தாத்தாமலை, உன்னிச்சை, மாவடிஓடை, வாகரை மதுரங்குளம், குஞ்சங்குளம் பகுதியில் குறிப்பிட்ட அளவுக்குமேல் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, பால்பவுடர், டின் உணவுகள், குளிர் பானங்கள் வாங்க வேண்டும் என்று கட்டுப்பாடு உள்ளது. இது தவிர மேய்ச்சல் நிலங்களுக்கு ஆடு, மாடுகளை கொண்டு செல்லவும் இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.
இதனால் அங்குள்ள தமிழர்கள் தினமும் உணவுக்காக பல மணிநேரம் பட்டியுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் சண்டையில் 32 புலிகள் பலி:
இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் கடைசிப் பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தை கைப்பற்ற சிங்கள ராணுவம் ஒருமாதமாக கடும் சண்டையிட்டு வருகிறது. போர் விமானங்கள் மூலம் குண்டுவீசி அப்பாவி மக்களை அங்கிருந்து ராணுவம் வெளியேற்றியது. ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல் நடத் தியது. குண்டு வீச்சில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகளும் ஏராளமானோர் பலியானார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக சுற்றி வளைத்த ராணுவம் கடைசியாக விடுதலைப்புலிகள் வசம் உள்ள புதுகுடியிருப்பு பகுதியை நோக்கி முன்னேறியது. அங்கு இது வரை விமான தாக்குதல் நடத்திய ராணுவம் நேற்று புதுகுடியிருப்பின் வட கிழக்கு பகுதிக்குள் சாலை மார்க்கம் வழியாக புகுந்தது.
அங்கு விடுதலைப்புலிகள் பதுங்கி இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். விடுதலைப்புலிகள் ராணுவத்தினரை சுற்றி வளைத்து தாக்கினார்கள். கடும் சண்டையில் விடுதலைப்புலிகள் 32 பேர் பலியானதாகவும், அவர்களது உடல்களை ராணுவம் கைப்பற்றியதாகவும் கொழும்பில் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ராணுவத்துக்கு ஏற்பட்ட சேதம் பற்றி எதுவும் வெளியாகவில்லை. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர்.
புதுகுடியிருப்பில் முன்னேறிய ராணுவம் உடையார்கட்டு, விசுவமடு, புளியன் பொக்கனை ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடும் சண்டைக்குப் பின் அங்கு விடுதலைப்புலிகளின் 11 உடல்களை ராணுவம் கைப்பற்றியது.
புதுகுடியிருப்பின் தெற்கு பகுதியில் உள்ள சாலை என்ற இடத்தில் சிங்கள ராணுவத்தின் 55-வது டிவிஷன் படை பிரிவு குவிக்கப்பட்டு மறுமுனையில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
தொடரும் விமான தாக்குதல்-38 தமிழர்கள் பலி!:
இதற்கிடையே விடுதலைப்புலிகள் பதுங்கி இருக்கம் வன்னி பகுதியில் சிங்கள ராணுவம் விமான தாக்குதல் நீடிக்கிறது. நேற்று விமானம் குண்டு வீச்சில் ஈடுபட்டது. ஏவுகணைகளும் வீசப்பட்டன. இதில் 12 சிறுவர்கள் உள்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 90 பேர் காயம் அடைந்தனர்.
இதே போல் மக்கள் பாதுகாப்பு வலய பகுதியான முள்ளி வாய்க்கால், வலைஞர் மடம் பகுதிகளில் நேற்று ராணுவம் பீரங்கி மற் றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அம்பலவன் பொக்கணை, மாத்தளன் பகுதிகளில் பீரங்கி தாக்குதலில் 11 தமிழர்கள் பலியானார்கள்