ஓய்வு பெறுகிறார் படாவி-பிரதமராகிறார் நஜீப்
கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பதில் புதிய பிரதமராக அதிகம் அறிந்திராத, தற்போதைய துணைப் பிரதமர் நஜீப் ரசாக் பதவியேற்கவுள்ளார்.
ஐக்கிய மலாய் தேசிய கட்சியான உம்னோவின் தலைவராக தற்போது இருக்கிறார் படாவி. மலேசியாவில், ஆளுங்கட்சியின் தலைவர்தான் பிரதமர் பதவியை வகிப்பார். அதன்படி படாவி பிரதமராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று நடந்த கட்சியின் வருடாந்திர கூட்டத்தில் நஜீப் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கபப்ட்ட நஜீப், ஏப்ரல் 3ம் தேதி புதிய பிரதமராக பதவியேற்கிறார்.
அதேசமயம், படாவியின் மருமகனான கைரி ஜமாலுதீன் கட்சியின் இளைஞர் அணித் தலைவராகியுள்ளார். இதன் மூலம் எதிர்காலத்தில் அவர் பிரதமர் பதவிக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் நஜீப். மலேசிய அரசியலில் மிகவும் அமைதியான நபர் இவர். அதிகம் அறியப்படாத ஒரு தலைவர். 30 வருடமாக எம்.பியாக இருப்பவர். இரண்டு முறை திருமணம் செய்தவர். 5 குழந்தகைள் உள்ளன.
மலேசியாவின் 6வது பிரதமராக நஜீப் பதவியேற்கவுள்ளார். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் என்றாலும் கூட இதுவரை நேரடியான எந்தவித பொருளாதார நிர்வாகப் பணியிலும் அவர் இருந்ததில்லை. வெறும் படிப்போடு சரி. பாதுகாப்பு, கல்வி அமைச்சராக இருந்துள்ளார். தற்போது துணைப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருக்கிறார்.
சிறுபான்மையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடியவர் என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளானவர் நஜீப். தமிழர்கள் நடத்திய போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர் நஜீப். மேலும், கோலாலம்பூரில் பேரணி நடத்திய தமிழ் அமைப்பின் நிர்வாகிகளை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைத்தவர். தமிழ் செய்தித் தாள்களை தடை செய்தவர். எதிர்க்கட்சியினர் மீது கட்டுப்பாடுகளை விதித்து ஒடுக்கியவர் என்ற குற்றச்சாட்டுக்களும் நஜீப் மீது உள்ளன.
இதுதவிர மங்கோலிய நாட்டு மாடல் அழகி ஒருவரின் கொலை வழக்கிலும் நஜீப் இணைத்துப் பேசப்பட்டார். இதை செய்தியாக வெளியிட்ட எதிர்க்கட்சி ஆதரவு இணையதளங்ககளை முடக்க உத்தரவிட்டார் நஜீப் என்பது குறிப்பிடத்தக்கது.