யுகேஜி மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியை

மணப்பாறை காமராஜ் நகரை சேர்ந்த பழனிச்சாமி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது 6 வயது மகள் ரோகிணி. இச் சிறுமி திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள்.
கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்ற ரோகிணியை அழைத்து வர பழனிச்சாமி சென்றபோது அவள் பள்ளியில் இல்லை. பல இடங்களில் தேடியும் ரோகிணி கிடைக்கவில்லை.
ரோகிணி அன்றைய தினம் பள்ளிக்கே வரவில்லை. அவளை பற்றி எதுவும் தெரியாது என்று பள்ளி தரப்பில் மறுத்தனர்.
இதையடுத்து ஊர் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகிணியை தேடி வந்தனர்.
இந் நிலையில் மறுநாள் ரோகிணி பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தாள்.
பிரேத பரிசோதனையில் ரோகிணி தண்ணீரில் மூழ்கி இறக்கவில்லை என்றும் தலையில் அடிபட்டு இறந்திருப்பதும், இறந்த பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி வீசப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் ரோகிணியை அவளது வகுப்பு ஆசிரியை ஜெயராகினியே (25) அடித்து கொன்றது தெரியவந்தது.
கொலை நடந்த அன்று வகுப்பில் ரோகிணி மற்ற மாணவிகளிடம் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து அவளை கண்டிக்க ஆசிரியை ஜெயராகினி ரோகிணியை முரட்டுதனமாக அடித்துள்ளார்.
ஆசிரியையின் அடியில் ரோகிணி மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் இறந்தும் போனாள்.
இதையடுத்து மற்ற மாணவிகளை அவசரமாக வெளியேற்றிவிட்டு பள்ளியில் வேலை பார்க்கும் எழுத்தர் ஆரோக்கியராஜ், அலுவலக உதவியாளர் சகாயராஜ் ஆகியோரிடம் விவரத்தை கூறியுள்ளார் ஜெயராகினி.
மாணவி மரணமடைந்த தகவல் வெளியானால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் கொலையை மறைக்க திட்டமிட்டனர். பள்ளி முடிந்து அனைவரும் சென்ற பிறகு மூவரும் சேர்ந்து ரோகிணியின் பிணத்தை தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு சென்று விட்டனர்.
விசாரணையி்ல் இந்த விவரம் தெரியவந்ததையடுத்து ஆசிரியை ஜெயராகினியை போலீசார் கைது செய்தனர். ஆரோக்கியராஜ் (39), சகாயராஜ் (40) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஜெயராகினி இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்து 2 மாதங்கள் தான் ஆகிறதாம்.












Click it and Unblock the Notifications