சிதம்பரத்தில் திருமாவை சந்திக்கும் பாமக பொன்னுச்சாமி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. தந்தை பெயர் எட்டையன். தாயார் ஆனந்தி அம்மாள். மனைவி பெயர் சாந்தி. 2 மகள்கள் உள்ளனர்.
73 வயதாகும் பொன்னுச்சாமி, 3வது முறையாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். எம்.ஏ அரசியல் அறிவியல் பட்டம் வென்றவரான பொன்னுச்சாமிக்கு, எழுத்தாளர், பதிப்பாளர், சமூக சேவகர் என வேறு சில முகங்களும் உண்டு.
முதல் முறையாக 1999ம் ஆண்டு சிதம்பரம் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டில் அவர் மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். மத்திய அரசின் பல்வேறு கமிட்டிகளில் உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
2004ம் ஆண்டு மீண்டும் லோக்சபா உறுப்பினராக சிதம்பரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லோக்சபா பாமக துணைத் தலைவராக தற்போது இருக்கிறார். இதுதவிர பல்வேறு மத்திய அரசின் கமிட்டிகளிலும் உறுப்பினராக இருக்கிறார்.
ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் பொன்னுச்சாமி. தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான லீக் அமைப்பின் தலைவராகவும், காந்தி சமாஜின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
திருமாவுடன் 2வது மோதல் ..
திருமாவளவனை எதிர்த்து பொன்னுச்சாமி மோதவுள்ளது இது முதல் முறையல்ல. 2004ம் ஆண்டு தேர்தலிலேயே திருமாவளவனும், பொன்னுச்சாமியும் நேருக்கு நேர் மோதினர்.
இதில், 3 லட்சத்து 43 ஆயிரத்து 424 வாக்குகளைப் பெற்றார் பொன்னுச்சாமி. திருமாவளவனுக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 773 வாக்குகள் கிடைத்தன. 87 ஆயிரத்து 651 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்னுச்சாமி வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் இங்கு ஐக்கிய ஜனதாதள கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார் திருமாவளவன். யாருடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டார். ஆனால் இம்முறை திமுக கூட்டணியில் இடம் பெற்று போட்டியிடுகிறார். இம்முறை உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றுபட்டு செயல்பட்டு வந்தன. ஆனால் அரசியல் நிர்ப்பந்தத்தால் இரு கட்சிகளும் தற்போது வெவ்வேறு அணிகளில் நிற்கின்றன.
அதிமுக கூட்டணியின் சார்பில் நிற்கும் பொன்னுச்சாமியும், திமுக கூட்டணியின் பலத்தை நம்பி திருமாவளவனும் களம் இறங்கும் சிதம்பரத்தில் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவாரா பொன்னுச்சாமி என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.