மதுரை கோட்டையில் முதன் முறையாக அழகிரி-வெல்வாரா?
தமிழக அரசியல் வரலாற்றில் மு.க.அழகிரியின் பாதை சற்று வித்தியாசமானது. யாராலும் எளிதில் ஓவர் டேக் செய்ய முடியாததது.
1950ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் பிறந்தவர் மு.க.அழகிரி. காந்தி என்ற மனைவியும், தயாநிதி என்கிற துரை, கயல்விழி, அஞ்சுகச் செல்வி என இரு மகள்களும் உள்ளனர்.
ஆரம்பத்தில் சென்னையில் வங்கி ஒன்றில் அழகிரி வேலை பார்த்தார் என்பது நிறையப் பேருக்கு ஆச்சரியமாக இருக்கும்.
1980ம் ஆண்டு தந்தை கருணாநிதி, மகன் அழகிரியை மதுரைக்கு அனுப்பி வைத்தார். மதுரை பதிப்பு முரசொலியை நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால் கூடவே கட்சிப் பணியையும் சேர்த்து பார்த்துக் கொண்டார் அழகிரி. மதுரையின் திமுக பெரும் தலைகளான பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், காவேரி மணியம் உள்ளிட்ட பல தலைவர்களையும் படிப்படியாக ஓவர் டேக் செய்து கட்சியை தன் பக்கம் கொண்டு வந்த திறமைசாலி.
தென் மாவட்ட திமுகவின் தனிப்பெரும் தலைவராக தனிப்பாதையில் நடைபோட்டு வந்தாலும் கூட, அவருக்கென்று கட்சியில் எந்தப் பதவியையும் கட்சித் தலைமை கொடுத்ததில்லை.
ஆனால் சமீபத்தில்தான் முதல் முறையாக தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் என்ற பதவி அவருக்குத் தரப்பட்டது.
மதுரையில் நடந்த மதுரை மத்தி, மேற்கு, திருமங்கலம் ஆகிய சட்டசபை இடைத் தேர்தல்களில் யாருமே எதிர்பாராத அளவுக்கு பிரமாண்ட வெற்றிகளை அழகிரி தலைமையில் திமுகவினர் பறித்தது அழகிரியின் மிகப் பெரிய சாதனை.
தென் மாவட்ட திமுக என்றில்லாமல் தென் மாவட்ட அரசியல் களத்தில் தவிர்க்க முடியாது ஒரு பெயர் அழகிரி. முதல் முறையாக தேர்தல் அரசியலில் குதித்துள்ளார் அழகிரி. அதுவும் தான் நேசிக்கும், சுவாசிக்கும், மதுரையிலிருந்து என்பதால் திமுகவினரும், அழகிரி ஆதரவாளர்களும் பெருத்த உற்சாகத்துடன் அண்ணனுக்கு மதுரையைப் பரிசாக அளிக்க களம் புகுந்துள்ளனர்.