நீலகிரியிலிருந்து கோவைக்கு மாறிய ஆர்.பிரபு
இவரை யாராவது எங்கேயாவது பார்த்தால் இத்தனை லட்சம் பரிசாக தரப்படும் என பிரபுவின் படத்தைப் போட்டு விளம்பரமே செய்யலாம். அந்த அளவுக்கு ஆக்டிவ் அரசியலில் சற்றும் சம்பந்தப்படாமல் தேர்தலின்போது மட்டும் தலையைக் காட்டும் அரசியல்வாதி ஆர்.பிரபு.
இவர் யாருடைய கோஷ்டியிலும் சேர மாட்டார். இவரே ஒரு கோஷ்டியின் தலைவர். ஆனாலும் இவரது கோஷ்டியில் யாரும் இல்லை. அதுதான் விசேஷமானது.
இப்படிப்பட்ட விசேஷமான குணாதிசயங்களைக் கொண்ட பிரபு, நீலகிரி தொகுதியில், ஐந்து முறை வென்றுள்ளார் என்பது வியப்பான ஒரு விஷயம்.
தந்தை பெயர் பி.ஆர். ராமகிருஷ்ணன். தாயார் பெயர் ராஜேஸ்வரி. 1947ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். அனிதா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ. ஹானர்ஸ் மற்றும் அமெரிக்காவின் எம்.ஐ.டியில் எஸ்.எம் பட்டம் வென்றவர்.
அடிப்படையில் இவர் ஒரு தொழிலதிபர். பிறகுதான் அரசியல்வாதி.
ஏராளமான எஸ்டேட்கள், எக்கச்சக்க சொத்துக்களுக்கு அதிபதி. போராட்டங்கள் எதிலும் தீவிரமாக பங்கேற்றதில்லை.
1980ம் ஆண்டு முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ம் ஆண்டு 2வது முறையாக எம்.பி. ஆனார்.
1986 முதல் 1989 வரை மத்திய விவசாயத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார்.
1989ம் ஆண்டு 3வது முறையாக எம்.பி. ஆனார். 1991ம் ஆண்டு நான்காவது முறையாக எம்.பி. ஆனார்.
தமாகா உருவானபோது அதில் இணைய மறுத்து காங்கிரஸிலேயே இருந்தார். 1996ல் நடந்த தேர்தலில் தமாகவின் எஸ்.ஆர்.பியிடமும், 1999ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் மாஸ்டர் மதனிடமும் தோல்வியுற்றார்.
2004ம் ஆண்டு ஐந்தாவது முறையாக எம்.பி. ஆனார்.
நீலகிரி தொகுதி தற்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியாக மாறி விட்டதால் திமுகவின் ராசா இங்கு போட்டியிடுகிறார். எனவே காங்கிரஸ் போட்டியிடும் கோவை தொகுதியை வாங்கி விட்டார் பிரபு.
நீலகிரியில் வழக்கம் போல பிரபுதான் ஜெயிப்பார் என்ற நிலை இருந்தது. ஆனால் கோவையில் நிலவரம் அப்படி இல்லை. இறங்கி விறுவிறுப்பாக வேலை செய்தால்தான் உண்டு. எனவே பிரபு ஆக்டிவாக செயல்படுவதற்கு முதல் முறையாக வாய்ப்பு வந்துள்ளது என்று சொல்லலாம்.