புதிய நாராயண மூர்த்திகளை உருவாக்குவாரா நாராயணமூர்த்தி?
இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன் தன் மனைவிடம் ரூ.10000 பணத்தைக் கடனாகப் பெற்று இன்போஸிஸை ஆரம்பித்த நாராயண மூர்த்தி இன்று தனிப்பட்ட முறையில் 1.8 பில்லியன் டாலர்களுக்குச் சொந்தக்காரர்.
இன்றும் இன்போஸிஸின் தலைவர் பதவியில் இருக்கும் நாராயணமூர்த்தி, இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
புதிய சிந்தனைகள் மற்றும் ஐடியாக்களுடன் தொழில் தொடங்கும் புதியவர்களுக்கு ஆரம்ப முதலீட்டை அளிப்பதே அவரது திட்டம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கம்ப்யூட்டர் தவிர்த்து, பிற துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஏராளமாய் உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள், நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளிடம் ஏராளமாய் புதிய ஐடியாக்கள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்த போதிய முதலீடு இல்லாமல் முடங்கிப் போகிறார்கள். அவர்களுக்குத் தேவை தடையில்லாத முதலீடும், நல்ல வழிகாட்டுதலும்தான்.
பணத்தை நல்ல முறையில் சேர்க்க இருக்கிற அனைத்து வழிகளையும் உபயோகிக்கும் எத்தனையோ இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன்.
டிக்கெட் புக்கிங், கூடுதல் நேரம் வேலை பார்ப்பது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு புதிய ஐடியாக்கள் தருவது... இப்படி எத்தனையோ வழிகளைக் கையாண்டு தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முனைகிறார்கள். இவர்களிடம் பல புதிய ஐடியாக்கள் உள்ளன.
இவர்களில் சிலரைத் தேர்வு செய்து ஆரம்ப முதலீட்டையும் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி தொழிலதிபர்களாக்குவதுதான் எனது திட்டம்.." எனும் நாராயண மூர்த்தி, இத்திட்டம் குறித்து விரிவாக பின்னர் பேசுவதாகத் தெரிவித்தார்.
நாராயண மூர்த்திக்கு முன்பே இத்தகைய ஆரம்ப முதலீட்டுத் திட்டத்தைத் துவங்கியவர், அவரது நண்பர் விப்ரோவின் தலைவர் அஜீம் பிரேம்ஜி.
இன்போஸிஸ் தலைவர் என்ற பதவியில் இருந்தாலும், அந்த நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளிலிருந்து விலகி, ஒரு ஆலோசகராகவே செயல்படுபவர் நாராயண மூர்த்தி. இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக அவராகவேதான் இந்த முடிவுக்கு வந்தார்.
எதிர்காலத்தில் இவரது வாரிசுகள் ரோஹன் மற்றும் அக்ஷதா இன்போஸிஸில் இணைவரார்களா..?
"இணைய வாய்ப்புள்ளது. ஆனால் இன்றைக்கு இன்போஸிஸ் தனக்கென ஒரு நிலையை அடைந்துவிட்டது. அதனால் ரோஹனும் அக்ஷதாவும் தங்களுக்கென ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொள்வதையே நான் விரும்புகிறேன்", என்கிறார் நாராயணமூர்த்தி.
வரும் 2010-ம் ஆண்டு மீண்டும் ஐடி துறை மிகச் சிறந்த இடத்துக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் கூறும் நாராயணமூர்த்தி, "புதிய நிறுவனங்களை இன்போஸிஸ் கையகப்படுத்துவதற்கான வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை" என்றார்.
இவருடன் சேர்ந்து இன்போஸிஸை ஆரபம்பித்த ராகவன், இப்போது 'நடத்தூர் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' எனும் பெயரில் புதிய முதலீட்டு நிறுவனத்தைத் துவங்கி, 12க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அதில் பிரபல கிரிக்கெட்டர் அனில் கும்ப்ளேவின் ஸ்டம்ப் விஷனும் ஒன்று.
சர்வதேச அளவில் தொழிலதிபர்களாக இருந்து பின்னர் முதலீட்டாளர்களாக மாறிய இந்தியர்கள் நி்றையவே உண்டு. சன்மைக்ரோசிஸ்டம்ஸ் தலைவர் வினோத் கோஸ்லா, இ பே நிறுவனர் பியர்ரே ஓமிடியார் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.