பாஜக-சரத்-கார்த்திக் கூட்டணியில் சுப்பிரமணிய சாமி
கூட்டணியே இல்லாமல் திண்டாடி வந்த பாஜக அலைந்து திரிந்து, தேடிப் பிடித்து இந்தக் கட்சிகளைப் பிடித்து, அமுக்கி, இணைத்து ஒரு அணியை உருவாக்கிவிட்டது.
இந்த கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் சென்னையில் இன்று நடந்தது. அதில் பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், பாஜக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சரத் கட்சிக்கு 5 சீட்..
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை இல.கணேசன் வெளியிட்டார்.
அதன்படி சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி நெல்லை, தென்காசி, நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கார்த்திக் கட்சிக்கு 2 +1..
கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 2 தொகுதிகளுடன், மேலும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும். அந்த ஒரு தொகுதி எது என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
ஐ.ஜ.தளத்திற்கு 2 சீட்..
ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் தொகுதிகளில் போட்டியிடும். மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஏற்கனவே 12 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இருப்பினும் கூடுதல் இடங்களிலும் போட்டியிட வாய்ப்புண்டு என்றார்.
கூட்டத்துக்கு பின் தமிழகம், புதுவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அதன் பின் கட்சியின் ஆடியோ- வீடியோ பிரச்சார கேசட் வெளியிடப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு,
தகுதியும், திறமையும் வாய்ந்த அத்வானி பிரதமராக மக்கள் விரும்புகிறார்கள். மத்தியில் பஜக தலைமையிலான கூட்டணி அரசு நிச்சயமாக மத்தியில் அமையும். அத்வானி பிரதமராவார். பாஜக 182 இடங்களில் தனித்து வெற்றிபெறும். தேசிய ஜனநாயக கூட்டணி 270க்கும் அதிகமான இடங்களைப் பிடிக்கும். தமிழ்நாட்டிலும் இந்த அணி வெற்றிபெறும்.
தேர்தலுக்கு பிறகு யார், யாரோடு கூட்டணி வைப்பார்கள் என்று இப்போது சொல்ல முடியாது என்றார்.
சரத் தேர்தல் அறிக்கை...
இதையடுத்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமாரும் கார்த்திக்கும்,
எங்கள் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும். மற்ற கூட்டணி எல்லாம் சந்தர்ப்பவாத கூட்டணி. எங்களது இந்த கூட்டணி லட்சிய கூட்டணியாகும். மக்கள் இந்த கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தருவார்கள். தமிழகத்தில் கணிசமான இடங்களில் இந்த அணி வெற்றிபெறும். தகுதியும், திறமையும் மிக்க அத்வானி நாட்டின் பிரதமராவது நிச்சயம் என்றனர்.
முதலில் சரத்குமார், இந்தக் கூட்டணியில் சேருவாரா என்பதில் பெரும் குழப்பம் இருந்தது. அதை நிரூபிப்பது போல சரத்குமார் வேறு பாதையில் போய்க் கொண்டிருக்கிறார். கார்த்திக் மட்டும் எங்களுடன் பேசி வருகிறார் என்று இல.கணேசன் கூறியிருந்தார்.
சாமி போட்டியில்லையாம்..
இந்த நிலையில் கூட்டணி திடீரென உறுதியாகி, தொகுதிப் பங்கீடும் சுபமாக முடிந்துள்ளது. இதில் சுப்பிரமணியம் சாமியும் ஓடிப் போய் இடம் பிடித்துவிட்டது தான் ஹைலைட்.
இவரை ஒரு காலத்தி்ல் திமுகவும் அதிமுகவும் தலையில் வைத்து ஆடின. பின்னர் தரையில் போட்டு மிதித்தன. இம்முறை எப்படியாவது அதிமுக-பாஜக கூட்டணியை உருவாக்கி அதில் இடம் பிடித்துவிட அதிபுத்திசாலி பத்திரிக்கையாளர் போன்றவர்களுடன் இணைந்து முயன்று பார்த்தார் சுவாமி. ஆனால், அதில் தோல்வி கிடைத்தது.
இதையடுத்து தனது கட்சியை மட்டுமாவது அதிமுக கூட்டணியில் இணைக்க முயன்றார். அதையும் ஜெயலலிதா என்கரேஜ் செய்யவில்லை.
இந் நிலையில் தனக்கு மிக நெருக்கமான பாஜக அணியில் இணைந்துவிட்டார். ஆனாலும் சுப்பிரமணிய சாமி தேர்தலில் போட்டியிட மாட்டாராம். அவர் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் சுற்றுப் பயணம் செய்து பாஜகவுக்காக பிரச்சாரம் செய்யவுள்ளாராம்.
விருதுநகரில் கார்த்திக்..
நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளில் ஒன்றான விருதுநகரில், வைகோவை எதிர்த்து நடிகர் கார்த்திக்கே போட்டியிடுவார் எனத் தெரிகிறது.