'ஈழம்': 100 ரயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டம் -கிருஷ்ணசாமி
தென்காசி: இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 100 ரயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வெள்ளபாண்டி, கிராம பஞ். தலைவராகவும், ராமலிங்கபுரத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இது சட்ட விரோதமானது.
அவர் மீதான அரசின் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளபோது பதவிகளை அவர் ராஜினமா செய்ய முடியாது. ஆனால் அவர் தனது பதவிகளை ராஜினமா செய்ததாக கடிதம் கொடுத்து மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அடிப்படையில் தவறு செய்பவர் 11 லட்சம் மக்களின் பிரதிநிதியாக எப்படி இருக்கமுடியும், அவரை வேட்பாளராக நிறுத்தியதே தவறு.
தேர்தலில் யார், யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம். அந்த வகையி்ல் சமூக நல்லிகணக்கத்தோடு சரத்குமார், கார்த்தக் ஆகியோர் தென்காசியில் போட்டியிடும் எனக்கு ஆதரவு தெரிவித்து அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவில்லை.
சரத் பிரச்சாரத்துக்கு வருவார்...
இதே போல சமூக ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு சமக, நாமக போட்டியிடும் தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளில் ஆதரவு கொடுப்பது குறித்து நாளை முடிவு அறிவி்ப்போம்.
மேலும் சரத்குமார், கார்த்திக் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் தென்காசி தொகுதியில் எனக்கு பிரச்சாரம் செய்ய அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
தென்தமிழகத்தில் தொழில் வளம் பெருகிடவும், ஜாதி, மத மோதலுக்கு நிரந்தரமாக முற்று புள்ளி வைக்கும் விதமாகவும் அனைத்து தரப்பனரிடமும் இருந்து ஆதரவை எதிர்பார்க்கிறேன். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளே ஆதரவு தந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
இதையடுத்து இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் உயிரை பாதுகாக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 100 ரயில் நிலையங்கள் முன்பு இலங்கை அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் ஜனநாயக கூட்டணி சார்பில் நாளை நடக்கிறது. தென்காசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடக்கிறது என்றார் கிருஷ்ணசாமி.