'சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட், திராட்சை தோட்டம் யாருக்கு?'
சென்னை: ஜெயலலிதா தன்னை தன்னலம் கருதாதவர் என்று சொல்லிக் கொள்கிறார்.
தனக்கென்று குடும்பம் இல்லை என்று கூறுகிறார். அப்படியென்றால் சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் ஆகியவை எல்லாம் யாருக்கு? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் சென்னை தேமுதிக வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து பல்வேறு இடங்களில் அவர் பேசுகையில்,
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி அமைத்து தமிழகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டன. பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் கடந்த 10 ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுக தமிழகத்துக்கு என்ன செய்தது?, தமிழகத்தில் 5 முறை முதல்வராக பதவி வகித்த கருணாநிதி, முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு பிரச்னையை தீர்த்தாரா?. கச்சத்தீவை மீட்டாரா?.
சேது திட்டம் நிறைவேறினால் தமிழகத்தை சோலைவனமாக்குவேன் என்கிறார் கருணாநிதி. ஆனால் அத்திட்டத்திற்கு அவர்கள் போராடுவது டி.ஆர்.பாலு கொள்ளையடிப்பதற்கே.
தேர்தல் பயம் கருணாநிதிக்கு வந்துவிட்டதால் உண்ணாவிரத நாடகம் நடத்தினார். மேலும் புதிய தலைமை தேர்தல் கமிஷனர் பொறுப்பேற்ற பிறகு திமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதன் எதிரொலிதான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பஸ் கட்டணக் குறைப்பு.
அதே போல மதுரை வாக்காளர்களுக்கு முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி இப்போதே ரூ.500யை முதல்கட்டமாக பட்டுவாடா செய்துவிட்டார்.
குடும்பம் இல்லாத ஜெவுக்கு சொதது எதற்கு?:
ஜெயலலிதா தன்னை தன்னலம் கருதாதவர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் தன்னலம் இல்லாதவர் மீது எப்படி சொத்து குவிப்பு வழக்கு, வருமானவரி வழக்கு, லஞ்ச வழக்கு ஆகியவை வரும். அந்த வழக்குகளை வாபஸ் பெற மறுத்ததால் வாஜ்பாய் அரசை கவிழ்த்தாரே, அதற்குப் பெயர் என்ன?, தன்னலம் இல்லையா?.
தனக்கென்று குடும்பம் இல்லை என்று கூறுகிறார் ஜெயலலிதா. அப்படி என்றால் சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் ஆகியவை யாருக்கு?.
தேமுதிக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு வர்த்தக மையம் அமைப்பேன். மாவட்டந்தோறும் பெண்கள் கல்லூரி தொடங்குவேன். 2 ஆண்டுகளிலே ஏழ்மையை இல்லாமல் ஆக்குவேன்.
தமிழ்நாடு வங்கி...!:
குடிசை வீடுகளுக்குப் பதிலாக கல் வீடு கட்டிக் கொடுப்பேன். தனிமனித வருமானத்தைப் பெருக்குவதற்காக தமிழ்நாடு வங்கி' என்ற பெயரில் புதிய வங்கியைத் தொடங்கி ரூ.10,000 முதல் ரூ.25,000வரை கடன் கொடுப்பேன். இந்த வங்கியை அமைப்பேன் என்று 2006ம் ஆண்டே சொன்னேன். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். நான் அளிக்கும் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தை பெயரிலும் ரூ.10,000 டெபாசிட் செய்வேன். அந்தக் குழந்தை திருமணத்தின்போது அந்தத் தொகை ரூ.2 லட்சம் ஆகியிருக்கும். அதனால் வரதட்சணை கொடுமையில் இருந்து அக்குழந்தையை காப்பாற்ற முடியும்.
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். இதனால் டூப்ளிகேட் ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்படும். அளவு குறையாமல் கிடைக்கும். வேலைவாய்ப்பும் பெருகும்.
'நம்ம' கலரில் அரிசி...:
ஒரு ரூபாய் அரிசி நம்ம கலரில் (தனது கருப்பு நிறத்தை சொல்கிறார்) இருக்கிறது. நமது பல்லைப் போல வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும். ஒரு ரூபாய்க்கு கிலோவும் (அரிசி), ஹலோவும் (இந்தியா முழுவதும் ஒரு ரூபாயில் பேச) நாங்கள்தான் கொடுத்தோம் என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இப்படி ஏமாற்றிக் கொண்டே இருந்தால் மக்கள் உங்களை 'சலோ, சலோ' என்று சொல்லிவிடுவார்கள்.
திமுகவில் தேமுதிக தேர்தல் பிரிவு செயலாளர்:
இதற்கிடையே தேமுதிக தேர்தல் பிரிவு செயலாளர் ஏ.ஜி.சம்பத் தனது ஆதரவாளர்களுடன் திடீரென திமுகவில் இணைந்துவிட்டார்.