ஸ்வைன் ப்ளூ:3 வாரத்தில் தடுப்பூசி 'ரெடி?'-இங்கி. விஞ்ஞானி

ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் மக்களை பீதியடைய செய்து வருகிறது. இதையடுத்து இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த வரிசையில் தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகளும் கால்வைத்துள்ளனர்.
ஸ்வைன் ப்ளூவுக்கு காரணமான H1N1 வைரஸ் அடிப்படையில் இரண்டு புரோதங்களால் ஆனது. அவற்றில் ஒன்று H எனப்படும் ஹேமக்குளேட்டனின் மற்றொன்று N எனப்படும் நியூராமினிடேஸ் என்ற புரதமாகும். அந்த வைரசின் பெயரில் இருக்கும் எண்கள் அதன் வகையை குறிக்கிறது.
இங்கிலாந்தின் ஹெர்ட்போர்டுஷையர் நகரில் இருக்கும் தேசிய உயிரியல் தரக்கட்டுபாடு நிறுவனத்தை சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் தற்போது அதிவேகமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் கோழி முட்டைக்குள் லேசான துளைபோட்டு அதில் இந்த ப்ளூ வைரசை வளர்க்க திட்டமி்ட்டுள்ளனர்.
இது குறித்து ஜான் வுட் என்ற விஞ்ஞானி கூறுகையில், வைரஸ்கள் வளர்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கோழி முட்டைக்குள் இருக்கிறது. அவை வைரஸ் தொழிற்சாலைகள் என்றார்.
இந்நிலையில் விஞ்ஞானிகள் முட்டையில் துளைபோட்டு அதில் ஸ்வைன் ப்ளூ வைரசை போட்டு அவற்றை வளர செய்கின்றனர். பின்னர் அவர்கள் இரண்டு தொழில்நுட்பங்களின் மூலம் தடுப்பூசி தயாரிக்க உள்ளனர். முதல் தொழில்நுட்பத்துக்கு ரிவர்ஸ் ஜெனிடிக்ஸ் என்று பெயர்.
இதில் H மற்றும் N புரோதங்களை தனியாக பிரித்து, அவற்றை PR8 என்ற வைரசின் உதவியுடன் மீண்டும் இணைக்கின்றனர். அப்போது கிடைக்கும் நோய் தன்மையற்ற ஒட்டு வைரஸ் மூலம் மருந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
மற்றொரு முறையில் H1N1 மற்றும் PR8 இரண்டையும் ஒரே சமயத்தில் முட்டைக்குள் போட்டு, அவற்றை இயற்கை வழியில் ஜீன் மாற்றம் அடைய செய்து, அதன் மூலம் உருவாகும் புதிய ஒட்டு வைரசிலிருந்து மருந்து தயாரிக்க இருக்கின்றனர்.
இந்த ஆராய்ச்சி விரைவில் முடிந்து இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் புதிய தடுப்பூசி தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இவற்றை பெரிய அளவில் தயாரிக்க நான்கு முதல் ஐந்து மாதங்கள் கூடுதலாக தேவைப்படும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications