கட்சி வாகனம் பறிமுதல்-சென்னையில் சரத் சாலைமறியல்
சென்னை: சென்னையில் தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி சமத்துவ மக்கள் கட்சியினர் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கட்சி தலைவர் சரத்குமார், வியாசர்பாடியில் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் 13ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் பிரசாரம் முடிந்துவிடுவதால், தலைவர்கள் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள சமக தலைவர் சரத்குமார் சென்னை பகுதியில் பிரசாரம் செய்துவருகிறார். வட சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து அவர் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவரை வரவற்க ச.ம.கவினர் வாகனங்களில் வந்தனர்.
சரத்குமார் அப்பகுதியில் இருந்து சென்ற சிறிது நேரத்தில், இது தேர்தல் விதிமுறைகளின் படி தவறு என கூறி போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இந்த தகவல் சரத்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அப்போது வியாசர்பாடியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த சரத்குமார், அந்த இடத்திலேயே தொண்டர்களுடன் அமர்ந்து சாலை மறியல் செய்தார். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதன் பின்னர் போலீஸ் அதிகாரிகள் வந்து வாகனத்தை விட்டுவிடுவதாக சமாதானம் பேசியதை அடுத்து சாலைமறியல் முடிவுக்கு வந்தது.