முள்ளிவாய்க்கால் பீரங்கித் தாக்குதலில் 134 தமிழர்கள் பலி
நட்டாங்கண்டல் தற்காலிக மருத்துவமனைக்கு அருகில் நேற்று காலை 10.30 மணியளவில் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டமாக வரிசையில் காத்திரு்தனர்.
அப்போது திடீரென மக்கள் கூட்டத்தின் மீது ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதில் 32 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 43 பேர் காயமடைந்தனர்.
அதேபோல முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த மற்ற தாக்குதல்களில் 102 பேர் கொல்லப்பட்டனர். 156 பேர் காயமடைந்தனர்.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என கூறி விட்டு தொடர்ந்து அப்பாவி மக்களையே குறி வைத்து ராணுவம் தாக்குதல் நடத்தி கொன்று குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி
இந்த நிலையில் கொழும்பில் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் மாளிகாவத்தை என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலுக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அங்கு சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
நேற்று பிற்பகல் இந்த தாக்குதல் நடந்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயடமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த சமயத்தி்ல் இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த சிலரை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம கும்பல் கடத்திச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மர்ம துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.