20,000 தமிழர்கள் படுகொலை குறித்து முன்பே விஜய் நம்பியார், பான் கி மூனுக்குத் தெரியும்: டைம்ஸ்
இலங்கையில் நடந்த மிகப் பெரிய மனிதப் பேரவலம் குறித்த உண்மைகளை டைம்ஸ் இதழ் படிப்படியாக வெளியிட்டு இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதி என அறிவிக்கப்பட்ட கடற்கரைப் பகுதியில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி மக்களை ராணுவம் மிகக் கொடூரமாக தாக்கி கொன்றதாகவும், இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது டைம்ஸ்.
இந்த கொடூர படுகொலை குறித்து பான் கி மூனுக்கும், விஜய் நம்பியாருக்கும் தெரியும் எனவும் அது இப்போது பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த படுகொலை குறித்து அரசல் புரசலாக மீடியாக்களில் செய்தி வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விஜய் நம்பியாருக்கு இந்தத் தகவலை இலங்கை அரசு தெரிவித்ததாம்.
பான் கி மூன் கொழும்பு வருவதற்கு முன்பே விஜய் நம்பியார் கொழும்புக்கு வந்திருந்தார். அப்போதுதான் இந்தப் படுகொலை குறித்த தகவலை இலங்கைத் தரப்பு நம்பியாருக்குத் தெரிவித்ததாம்.
தனக்குக் கிடைத்த தகவலை பான் கி மூனுக்கு விஜய் நம்பியாரும் தெரிவித்துள்ளார். ஆனால் கொழும்பு வந்திருந்த பான் கி மூன் இந்த உயிர்ப்பலி எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை. மாறாக தான் இதுவரை பார்த்ததிலேயே மிகப் பெரிய மனிதப் பேரவலம் நடந்திருப்பதாக மட்டும் கூறி விட்டு போய் விட்டார்.
நம்பியாருக்கும், பான் கி மூனுக்கும், அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட தகவல் தெரிந்தும் அதை வெளிப்படுத்தாமல் கமுக்கமாக மறைத்து விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.