பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் உள் ஒதுக்கீடு-வீரமணி கோரிக்கை
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
காங்கிரஸ் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஜனாதிபதி பல்வேறு நலத் திட்டங்களை 100 நாட்களில் நிறைவேற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் பெண்கள் மசோதாவும் ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.
1996ம் ஆண்டு முதன் முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது நிறைவேற இருக்கிறது. இது மிக மகிழ்ச்சியான செய்தி.
ஆனால், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தற்போதைய நிலையில் அப்படியே பயன்படுத்த கூடாது. அப்படி செய்தால் அது உயர் ஜாதி பெண்களுக்குத்தான் அதிக பயன் தரும். அவர்கள் முக்கிய பொறுப்புகளில் அமர்வதற்கு வசதியாகிவிடும்.
அதனால், இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் உட்பட அனைத்து தரப்பு பெண்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் உள் ஒதுக்கீட்டுடன் செயல்படுத்த வேண்டும்.
இதைத் தான் நேற்று ஐக்கிய ஐனதா தள தலைவர் சரத் யாதவ் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார். லாலு பிரசாத், முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் இந்த கருத்தையே வலியுறுத்தி வருகின்றனர். திமுகவும் இந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.
15ம் தேதி ஆர்ப்பாட்டம்...
இதை வலியுறுத்தி திராவிட கழகம் சார்பில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 நகரங்களில் கட்சியின் மகளிர் அணி சார்பில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அகதிகளை இலங்கை அனுப்பகூடாது...
போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அங்கு இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. இதனால் தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களை அங்கு திருப்பி அனுப்ப கூடாது. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
ராஜபக்சே உலக நாடுகளிடம் நிதி உதவி கேட்டு வருகிறார். அந்த பணம் தமிழர்களின் நலப்பணிகளுக்கு முழுமையாக சென்று சேர வேண்டும். இலங்கை அரசின் கஜானாவில் உறங்கிவிட கூடாது என்றார் வீரமணி.