'ஸ்வைன்'-வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை குறைந்தது
சென்னை: பன்றிக் காய்ச்சல் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
மெக்சிகோவில் தொடங்கி பல்வேறு நாடுகளை வியாபித்து வருகிறது பன்றிக் காய்ச்சல். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அமெரிக்காவுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு ஆலோசனை கூறியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத் தரப்பில் கூறுகையில், வெளிநாடு சென்றால் எங்கே நோய் தொற்றி கொள்ளுமோ என்ற பயத்தில் பலர் தங்கள் முன் பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டுகளை திருப்பபெற்று சென்றுள்ளனர்.
இதனால் சென்னையில் இருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.
அதே போல் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான விமானங்கள் காலியாக பறந்து கொண்டிருக்கின்றன. நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை அடையாளம் காண்பதற்காக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவ குழு நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரையும் ஒருவர் விடாமல் இந்தக் குழு பரிசீலித்த பிறகே வெளியில் விடுகிறது.












Click it and Unblock the Notifications