உழவர் சந்தை போல் உணவு சந்தை-ஹோட்டல்கள் உரிமையாளர்கள் கோரிக்கை
சென்னை: விவசாயிகளுக்கு உழவர் சந்தை ஏற்படுத்து கொடுத்து அவர்களை மகிழ்வித்த முதல்வர் ஹோட்டல் சங்கத்தினருக்காக உணவு சந்தை துவக்க வேண்டும் என தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி, செயலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் ரூ. 20க்கு அனைத்து ஹோட்டல்களிலும் மலிவு விலை சாப்பாடு தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதை அந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
இது சென்னை போன்ற பெரிய நகரங்களை விட சின்ன நகரங்களில் நன்றாக செயல்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசிகள் அதிகரித்துவிட்டது. அரிசி விலை 55 விழுக்காடும், பருப்பு விலை 45 விழுக்காடும் மற்ற மளிகை பொருட்கள் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
தட்பவெட்பம் காரணமாக காய்கறிகள், பழங்கள் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, பருப்பு உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களின் தேவைகளுக்கு வெளி மாநிலங்களை நம்பியே உள்ளது. இதுவும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது.
இவ்வாறு பல்வேறு பொருட்களின் விலை ஏற்றத்தினால் உணவு தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இருந்தாலும் தமிழக அரசு கேட்டுக்கொண்டதின்படி ரூ. 20 ரூபாய் சாப்பாடு தொடர்ந்து வழங்கப்படும்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் குறைந்த விலையில் சில வகை உணவுகளை வாங்கும் நிரந்தர அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் விருப்பம். முதல்வர் கருணாநிதியின் உழவர் சந்தை திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. விவசாயப் பெருமக்களும், பொது மக்களும் பயன் பெற்றுள்ளனர்.
அதே போன்று அனைத்து நகரங்களிலும் உணவுச்சந்தை அமைக்கும் திட்டம் ஒன்றினை நாங்கள் அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம். தமிழக அரசு உதவியுடன் இத்திட்டத்தினைச் செயல்டுத்த எண்ணியுள்ளோம்.
இத்திட்டத்திற்குத் தேவையான மூலதனம், தொழில் நுட்பம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பொறுப்புகளை எங்கள் சங்கம் ஏற்கும் என அரசுக்குத் தெரிவித்துள்ளோம் தமிழக அரசின் ஒப்புதலை எதிர் நோக்கியுள்ளோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications