பாமகவுடன் கூட்டணி வைத்தது தவறு-ப.சி
சிவகங்கையில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் 28 இடங்களைத் தந்ததால் தான் இன்று முக்கிய இலாகாக்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதன் பயனால் சேது சமுத்திரத் திட்டம் கண்டிப்பாக நிறைவேறும். நலிந்துவிட்ட நெசவுத் தொழில் நிமிர்ந்து நிற்கும்.
காளையார்கோவில் என்.டி.சி.மில்லுக்கு மேலும் வளர்ச்சி ஏப்படும். தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி ஏற்பட்டு மேலும் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
என்னை பொறுத்தவரை நீங்கள் 5 ஆண்டு சாதனைகளுக்காக வாக்களிக்கவில்லை. எதிர்கால கனவுகளுக்காக வாக்களித்துள்ளீர்கள்.
இந்த முறை தேர்தல் அறிக்கையில் கூறியபடி நாடாளுமன்றம், சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கண்டிப்பாக நிறைவேறும். அத்துடன் மத்திய வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, அவருடைய சிலைகளை வைப்பதற்காக, ரூ.1,000 கோடி செலவிடுவது கண்டனத்துக்குரியது. இவ்வளவு பெருந் தொகையை சிலைகளை அமைப்பதற்காக செலவிடுவதை விட வறுமையை அகற்றி, மக்களுக்கு அடிப்படை தேவை வசதிகளை செய்து கொடுப்பதற்காக பயன்படுத்தி இருக்கலாம். சிலைகளை வைப்பதால், மக்களுக்கு என்ன பயன்?
தேர்தலில் நாடு முழுவதும் மக்கள் ஜாதீய அரசியலை நிராகரித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாதி அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர்.
ஜாதிக்கு அப்பாற்பட்டு சிந்திக்க தொடங்கிய மக்கள், மக்களுக்காக பாடுபடும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். சிவகங்கை தொகுதியின் சில பகுதிகளிலும் ஜாதி அரசியல் விளையாடியது. ஆனால், தமிழ்நாட்டில் ஜாதி அரசியலுக்கு மரண அடி விழுந்துள்ளது. ஜாதி அடிப்படை கட்சியான பாமகவுடன் ஏற்கனவே கூட்டணி அமைத்ததற்காக நான் வருந்துகிறேன்.
அதே நேரத்தில், இந்த தேர்தலில் அந்த கட்சிக்கு ஒரு இடம் கூட கொடுக்காமல் மக்கள் புறக்கணித்துவிட்டனர். மத்தியில் பதவி ஏற்றுள்ள காங்கிரஸ் அரசு எந்த சாதனையையும் செய்யவில்லை என்றால், அடுத்த தேர்தலின்போது காங்கிரசுக்கு சம்மட்டி அடி கொடுங்கள் என்றார் சிதம்பரம்.