மசூதி இடிப்புக்கு முழு பொறுப்பேற்கிறேன்-உமா பாரதி
மசூதி இடிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ள லிபரான் கமிஷனால் விசாரிக்கப்பட்ட பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் தலைவர்களில் உமா பாரதியும் ஒருவர்.
இந்த அறிக்கை குறித்து பல்வேறு தொலைக்காட்சிகளில் தோன்றி கருத்துத் தெரிவித்த உமா பாரதி,
அயோத்தியில் கர சேவைக்காக பாஜக தான் லட்சக்கணக்கான தொண்டர்களை அழைத்து வந்தது. இது தான் உண்மை. இதனால் மசூதி இடிக்கப்பட்டதற்காக பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்கக்கூடாது.
அந்த இடத்தில் பூஜை நடத்தவே நாங்கள் கூடினோம். ஆனால், நரசிம்ம ராவ் அரசு திடீரென எங்களை அங்கிருந்து அகற்ற முயன்றதால் கோபமடைந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மசூதி இடிப்பில் ஈடுபட்டனர்.
அவர்களை மசூதியை விட்டு இறங்குமாறு மைக்கில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த இடிப்புக்கு நான் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டால் அதை ஏற்க நான் தயார் என்றார் உமா பாரதி.
மேலும் முஸ்லீம்கள் ஓட்டுக்காக இந்த அறிக்கையை இந்த நேரத்தில் காங்கிரஸ் கேட்டு வாங்கியுள்ளது என்று கூறிய உமா பாரதியிடம், அப்படியானால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இந்த அறிக்கையை காங்கிரஸ் வாங்கியிருக்கலாமே என்று கேட்டதற்கு அவர் பதில் சொல்லவில்லை.
அதே போல பாபர் மசூதி இடிப்பு தன் அரசியல் வாழ்வில் ஒரு அழிக்க முடியாத கறை என்றும், அது இடிக்கப்பட்டதைப் பார்த்தபோது கண்ணி்ல் நீர் வந்துவிட்டதாகவும் அத்வானி ஏற்கனவே கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் இந்த விஷயத்துக்காக தூக்கு மேடை ஏறவும் தயார்.
அயோத்தி இயக்கத்தால் தான் நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் இரண்டு இடங்களில் இருந்து 144 ஆனது, இதனால் தான் வாஜ்பாய் ஆட்சிக்கு வர முடிந்தது.
மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் நான் அதே நேரத்தில் சோனியா காந்திக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். இந்திரா காந்தி கொலையை தொடர்ந்து, காங்கிரசின் தூண்டுதலால் 20,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குக் காரணமான குற்றவாளிகள் ஒருவரைக் கூட காங்கிரஸ் கூட்டணி அரசு இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதற்கு சோனியா பொறுப்பேற்பாரா என்றார் உமா பாரதி.
பாஜக ஒத்துழைப்பு கொடுத்தது...
பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,
இந்த கமிஷன் நடத்திய விசாரணையின்போது பாஜக தலைவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால்தான் அதன் அறிக்கை தாக்கலாவதில் தாமதம் ஏற்பட்டது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
இது காங்கிரசின் பொறுப்பின்மையை காட்டுகிறது. கமிஷன் நடத்திய குறுக்கு விசாரணையில் ஆஜராகி இருக்கிறார் அத்வானி. அவரிடம் மட்டும் விசாரணை ஒரு வாரத்துக்கு மேல் நடந்தது. அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் முன்பே பாஜக மீது குற்றம் கூறி சதி செய்கிறது காங்கிரஸ்.
அறிக்கையில் உள்ள விவரங்களை நாடு அறிந்து கொள்ள உரிமை உள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்வதா அல்லது வேறு வழியில் இதுபற்றி பொது விவாதம் நடத்துவதா என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அதற்குரிய பதிலை அவையில் பாஜக தெரிவிக்கும்.
அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவதே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் என்பதே நாடு முழுவதும் உள்ள இந்துக்களின் பரவலான உணர்வோட்டமாக உள்ளது.
பாஜகவும் அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது என்பதில் தீர்மானமாக உள்ளது என்றார் ரவிசங்கர் பிரசாத்.
தொடர்பான வீடியோ: