பணம் தராத தாயை கொன்ற மகன் போலீசில் சரண்
சென்னை: சென்னையில் மகளின் படிப்பு செலவுக்கு ரூ. ஆயிரம் கொடுக்க மறுத்த தாயாரை கொன்ற மகன் தானாக போலீசில் தவறை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி.
பரமேஸ்வரனின் தந்தை கிருஷ்ணன், தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக இருந்தார். தாயார் நாராயணியம்மாள் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர்கள் இருவரும் சிறந்த சமூக சேவர்கள். கிருஷ்ணனின் சேவையை பாராட்டி அவர் வசித்த அந்த தெருவுக்கு கிருஷ்ணன் என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி நாராயணியம்மாள் கல் தடுக்கி கீழே இறந்துவிட்டதாக கூறி, அவரது உடல் எரிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை தனது தாயார் கல் தடுக்கி விழுந்து இறங்கவில்லை. நான் அடித்ததால் தான் இறந்துவிட்டார் என கூறி நாராயணியம்மாளின் மூத்த மகன் பரமேஸ்வரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இது குறித்து அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம்,
எனது மகள் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினியரிங் படிக்கிறார். அவரது படிப்பு செலவுக்காக வங்கி கடன் வாங்கியுள்ளேன். அதற்கான வட்டி தொகையை கட்ட என் தாயாரிடம் ரூ. ஆயிரம் கேட்டேன். ஆனால், அவர் தர மறுத்துவிட்டார்.
இதையடு்தது கோபமடைந்த நான் அவரை நாற்காலியில் இருந்து கீழே தள்ளிவிட்டேன். இதில் அவருக்கு நெற்றியில் அடிபட்டது. அவரை உடனே தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து அவர் கல் தடுக்கி விழுந்து இறந்துவிட்டதாக கூறினேன். தற்போது எனது மனசாட்சி கேட்கவில்லை. அதனால் போலீசில் சரணடைய முடிவு செய்தேன். தாயை கொன்ற பாவத்துக்கு எனக்கு சரியான தண்டனை கொடுங்கள். இல்லையென்றால் தற்கொலை செய்து கொண்டு, என் தாயிடம் சென்றுவிடுவேன் என்றார் அவர்.
இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.