கருணாநிதி டாக்டர் மருத்துவமனையி்ல் இலவச டிவிகள்-விஜயகாந்த்
தூத்துக்குடி: முதல்வர் கருணாநிதியின் டாக்டரின் மருத்துவமனைக்கு தமிழக அரசின் இலவச டிவி போனதை போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும். டிவியை வழங்கிய அதிகாரிகளுக்கு அது எங்கே போனதென்று தெரியாதா என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனை ஆதரித்து விஜயகாந்த் நேற்று 2வது நாள் பிரசாரம் மேற்கொண்டார்.
ஏரலில் நடந்த பிரசாரத்தின் போது அவர் பேசுகையில்,
இந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு உள்ள குளங்களை தூர்வாரினாலே இந்த பகுதி செழிப்பானதாக மாறும். ஆனால் அந்த பணியை அரசு செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குளங்கள் தூர்வாரப்படும். இதனால் விவசாயம் வளர்ச்சி பெறும்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குடும்பநிதி மாதம் ரூ.500 வழங்க வேண்டும் என்று கூறி இருந்தேன். அதை வழங்க வேண்டும். இந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வினியோகம் செய்வோம்.
கலைஞர் 121 சாதனைகளை செய்ததாக கூறுகிறார். அதை அவர் சொல்லக்கூடாது. மக்கள் சொல்ல வேண்டும்.
இந்த அரசு செய்த சாதனை விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வுதான். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்ததையும், இலவச கலர் டி.வி. கொடுப்பதையும் கூறுகிறார்கள்.
கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6ஆயிரம், திருமணத் தொகை வழங்குவது சாதனையாக கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊனமுற்றவர்கள் அதிகமாக பிறக்கிறார்கள். அதிகமாக உள்ளனர். இது ஒரு சாதனை என்கிறாரா?.
நான், எனக்கு தைரியம் இருப்பதால் கூட்டணி இல்லாமல் நிற்கிறேன். எனவே தேமுதிக வேட்பாளர் சவுந்திரபாண்டியனுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். இந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதியை வைகுண்டமாக மாற்றிக் காட்டுகிறேன்.
முதல்வர் கருணாநிதிக்கு சிகிச்சையளித்த டாக்டர் ஒருவரது சென்னை மருத்துவமனையில் அரசின் 70 இலவச கலர் டிவி-க்கள் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தேன்.
அதற்கு முதல்வர் கருணாநிதி அது எந்த மருத்துவமனை என்று சொன்னால், அது பற்றி உரிய விசாரணை நடத்த அரசு தயாராகவுள்ளதாக கூறியுள்ளார்.
அவற்றை கொடுத்த அரசு அதிகாரிகளுக்கு அந்த டிவி-க்கள் எந்த மருத்துவமனையில் உள்ளன எனத் தெரியாதா? அவர்களிடம் அதற்கான லிஸ்ட் இருக்குமே? நான் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் செல்லும் வரை எந்த கலர் காரில் செல்கிறேன், யாரோடு செல்கிறேன் என, உளவுத்துறை போலீசார் கண்காணித்து, முதல்வருக்கு தகவல் தருகின்றனர்.
கொலை, கொள்ளை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீசார், எதிர்க்கட்சிகளை வேவு பார்க்கும் போலீசார் என்னைப்பற்றி தகவல்களை தருவது போல, அந்த டிவிக்கள் எந்த மருத்துவமனையில் உள்ளன? என விசாரித்து கண்டுபிடிக்கலாமே.
திமுக தான் செய்த சாதனைகளைச் சொல்லித்தான் ஓட்டுக்கேட்க வேண்டும். பணம் தந்து ஓட்டுக் கேட்கக் கூடாது.
சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். அவர் நியமித்த ஊழியர்களை பழிவாங்கும் போக்கு கண்டிக்க தக்கது.
திமுகவுக்கு எதிர்காலம் கிடையாது. தொகுதியின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க தே.மு.தி.கவுக்கு ஓட்டளியுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் நிம்மதியாக வாழலாம்.
எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள், விசுவாசிகள் திமுகவிற்கு ஓட்டுப் போடக் கூடாது. நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள். நல்ல கட்சியை ஆதரியுங்கள். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
விரைவில் மாற்றம் வரும். தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தொடர்ந்து சுட்டு கொன்று வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கு பொருள்கள் கடத்துவதால் தமிழக மீனவர்களை தாக்குவதாக இலங்கை ராணுவம் முன்னர் கூறியது. இப்போது விடுதலைப்புலிகளையே ஒழித்து விட்டோம் என்று கூறுவதற்குப் பிறகும் ஏன் தமிழக மீனவர்களை தாக்குகின்றனர்.
இதைக் கண்டிக்க மாநிலத்தில் உள்ள திமுக அரசும், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் தவறிவிட்டன. 5 முறை முதல்வராக இருந்தவரால், தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முடியாதது ஏன்ய
தேமுதிக வேட்பாளர் வெற்றிபெற்றால் அணைகள், குளங்களை தூர்வாறி, வீணாகச் செல்லும் தண்ணீர் தடுக்கப்படும். அதன் மூலம் விவசாயம் பெருகும். மணல் கொள்ளையால் ஆற்றுப்படுகையே காணாமல் போய்விட்டது. இந்த மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மழை காலங்களில் மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதை மாற்றி மேம்பாலம் கட்டுவோம் என்றார் விஜயகாந்த்.