முத்தூட் நிதி நிறுவன தலைவரின் மகன் வெட்டிக் கொலை
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஜார்ஜ். பிரபலமான முத்தூட் நிதி நிறுவனத்தின் அதிபர் ஆவார். இவரது மகன் பால் ஜார்ஜ்.
ஆலப்புழா - செங்கனச்சேரி சாலையில் பொங்கா என்ற இடத்தில் நேற்று நள்ளிரவில் இவர் ஒரு கும்பால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
ஸ்கார்பியோ காரில் வந்து கொண்டிருந்த பால் ஜார்ஜை அக்கும்பல் பின்தொடர்ந்து வந்துள்ளது. பொங்கா என்ற இடத்திற்கு வந்தபோது காரை வழிமறித்து நிறுத்தி இறங்கிய கும்பலைச் சேர்ந்தவர்கள் பால் ஜார்ஜை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டுத் தப்பினர்.
பால் ஜார்ஜுடன் காரில் பயணித்த அவரது நண்பர் மனு என்பவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் அவர் காயமடைந்து ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது தெரியவில்லை. முத்தூட் நிறுவனத்தில் செயல் இயக்குநராக இருந்து வந்தார் பால் ஜார்ஜ். ரியல் எஸ்டேட்டிலும் அவர் ஈடுபட்டிருந்தார். எனவே தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
33 வயதான பால் ஜார்ஜ், இன்னும் கல்யாணமாகாதவர். சமீபத்தில்தான் அவர் டெல்லியிலிருந்து திரும்பி தனது குடும்பத் தொழிலில் இணைந்தார்.
டெல்லியில் அவர் இருந்தபோது போதை மருந்து போலீஸாரால், கைது செய்யப்பட்டவர். அவரது வேலைக்காரர்களில் ஒருவர் கொகைனுடன் பிடிபட்டார். இதையடுத்து பால் ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கோர்ட் விடுதலை செய்தது.
சாதாரண சிட் பன்ட் நிறுவனமாக தொடங்கப்பட்ட முத்தூட் நிதிக் குழும நிறுவனம், பின்னர் மிகப் பெரிய நிதி நிறுவனமாக உருவெடுத்தது. கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதற்கு ஏராளமான கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.