அண்ணா நூற்றாண்டு விழா-பிரணாப், ராஜசேகர ரெட்டி பங்கேற்பு
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் சர்வக்னர் சிலை திறப்பின் மூலம் தமிழக, கர்நாடக அரசுகளிடையிலான உறவு மேம்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணா நூற்றாண்டு விழாவின் மூலம் ஆந்திராவுடனான உறவை மேம்படுத்திக் கொள்ளவும், பாலாறுப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண அடித்தளம் அமைக்கவும் திமுக அரசு முடிவு செய்தது.
அதன்படி அண்ணா நூற்றாண்டு விழாவுக்கு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை அழைக்க தீர்மானமானது. சமீபத்தில் ஹைதராபாத் சென்று ரெட்டியை சந்தித்த தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி அழைப்பிதழை நேரில் கொடுத்தார்.
இந்த நிலையில் அண்ணா நூற்றாண்டு விழாவுக்கு தற்போது பிரணாப் முகர்ஜியும் வரவுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ...
தமிழக அரசின் சார்பில், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா, கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் நிறைவு விழா, செப்டம்பர் 15-ந் தேதி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது.
விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். நிதியமைச்சர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
விழா கொண்டாட்டத்துக்கு அன்பழகன் தலைமையில் மலர்க்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. துணை தலைவராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மலர்களை வெளியிடும் ரெட்டி...
செய்தித்துறை இயக்குநர் காமராஜ், ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவின் தலைவர் கயல் தினகரன், தமிழக அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் கவிஞர் வேழவேந்தன், தமிழ் வளர்ச்சி, அறநிலையம், செய்தித்துறை செயலாளர் ஜி.முத்துசாமி ஆகியோர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர்.
இந்தக்குழு, அண்ணாவின் பெருமைகள் அனைத்தையும் உலகறியச் செய்யும் அரிய கருவூலமாக, அண்ணா நூற்றாண்டு நினைவு சிறப்பு மலர்' மற்றும் ஆய்வு மலர்' ஆகியவற்றை தயாரித்துள்ளது. இந்த மலர்களை ராஜசேகர ரெட்டி வெளியிடுகிறார்.
நாணயத்தை வெளியிடும் பிரணாப் முகர்ஜி...
அதேபோல் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ. 5 நாணயத்தை வெளியிட மத்திய அரசிடம் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இந்திய தபால் துறை, அண்ணா படம் பொறித்த ரூ. 5 நாணயத்தை வெளியிடுகிறது. இதை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட, அதை கருணாநிதி பெற்றுக் கொள்கிறார்.
விழாவில்,துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் இணையதளத்தைத் தொடங்கி வைக்கிறார். அத்துடன் தமிழரசு' இதழ் தயாரித்துள்ள அண்ணாவின் பொன்மொழிகள்' நூல், அகரமுதலி இயக்ககம் தயாரித்துள்ள இரண்டு தொகுதி நூல்கள் ஆகியவற்றையும் அவர் வெளியிடுகிறார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.