திமுகவின் குரலை யாராலும் ஒடுக்க முடியாது-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: திமுகவின் குரலை எந்த சக்தியாலும் ஒடுக்க முடியாது. அத்தகைய வலிமையை இப்போது நாம் பெற்றிருக்கிறோம். என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

86 ஜோடிகளுக்கு அண்ணா அறிவாலயத்தில் இன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன. திருமணங்களை நடத்தி வைத்து சீர்வரிசைகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசுகையல்,

திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு திருமண உதவித் திட்டம் தொடங்கப்பட்டு ஆரம்பத்தில் ரூ.5,000, பிறகு ரூ.10,000என்று வழங்கி தற்போது ரூ.20,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 2.29 லட்சம் திருமணங்கள் நடந்துள்ளன. அதில் என்னுடைய 86 வயதை குறிக்கும் வகையில் நடந்த இந்த 86 திருமணங்களும் இணைகி்ன்றன.

வாரத்தில் 5 நாட்கள் திமுக தொண்டர்கள் என் வீட்டுக்கு வந்து திருமணத்தை நடத்திச் செல்கிறார்கள். இங்கு திருமணம் நடைபெற்றவர்களுக்கு குத்துவிளக்கு, குடம், தலையணை, மெத்தை போன்ற சீர்வரிசைகள் வழங்கப்படுகின்றன.

இதை எல்லாம் பார்க்கும்போது எனக்கும் இப்போது திருமணம் நடந்திருக்க கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்தவர்களை பாராட்டுகிறேன்.

திருமணம் என்பது திமுகவின் பிரச்சாரத்தில் ஒரு பகுதி. எத்தனையோ சுயமரியாதை திருமணங்களை திமுக நடத்தியுள்ளது. பெரியார் ஒப்படைத்த அந்த திருமணங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். நெருக்கடிநிலை காலத்தில் வெளியே சென்று பேச முடியாத நிலையில் திமுக தொண்டர்கள் என் இல்லத்துக்கு வந்து நூற்றுக்கணக்கான திருமணங்களை நடத்திச் செல்வார்கள்.

திமுக கரை வேட்டி கட்டினால் போலீசார் கைது செய்வார்கள் என்று அஞ்சி திருப்பதி, பழனி, திருத்தணி போவதாக பொய் சொல்லி மொட்டை அடித்து, பட்டை தீட்டிக் கொண்டு என் வீட்டுக்கு வந்து கோவிலுக்கு செலுத்த வேண்டிய காணிக்கையை திமுகவுக்கு செலுத்தி விட்டு திருமணத்தை நடத்திச் செல்வார்கள்.

இப்போது அதையெல்லாம் நினைத்து பார்க்கும் போது எவ்வளவு பெரிய சோதனைகளையும், நெருக்கடிகளையும், அடக்குமுறைகளையும் இந்த இயக்கம் கடந்து வந்திருக்கிறது என்பது தெரிகிறது.

இந்த இயக்கத்துக்கு எவ்வளவு நெருக்கடி அடக்கு முறை ஏற்பட்டாலும் காவல் துறையாலோ, வேறு துறைகளாலோ நசுக்கப்பட்டாலும் அவர்களிடம் இருந்து மீண்டும் தழைக்க செய்ய உங்களைப் போன்ற வலிமையான தோழர்களும், தொண்டர்களும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

முன்பு திருமண விழாக்களில் திமுகவின் கருத்துக்களை கூறினோம். ஒரு முறை ஈரோடு அருகே வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திருமண விழாவுக்கு சென்றேன். அங்கு அரசியல் பேசக்கூடாது. மைக்கில் பேசக்கூடாது என்று போலீசார் கூறினார்கள்.

உடனே தகரத்தால் ஆன மெகா போன் குழாயில் ஒரு மணி நேரம் பேசி மணமக்களை வாழ்த்தினேன். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் மறுக்கப்பட்டாலும் நமது குரல் ஓங்கி ஒலிக்கும். இது பெரியார் குரல், அண்ணாவின் குரல். இந்த குரலை அடக்க எந்த சக்தியும் தமிழகத்தில் இல்லை என்ற அந்த நம்பிக்கையை பெற்றிட வேண்டும்.

திருமணம் செய்து கொண்டுள்ள இந்த திராவிட செல்வங்கள் வாழ்க! வளர்க! என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+