இலங்கைக்கு முன்பு அனுமன் வந்தான்: இப்போது சனி வந்து விட்டார்-தமிழ் நாளிதழ்
கொழும்பு: இலங்காபுரிக்கு முன்பு அனுமன் வந்தான்! இப்போ சனீஸ்வரனும் வந்துவிட்டார் என டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக -காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் குழு வருகை குறித்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழின் தலையங்கம் விமர்சித்துள்ளது.இதுகுறித்து வலம்புரியின் தலையங்கம்:
தமிழக எம்.பிக்கள் குழு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்தது. வழக்கப்படி மங்கள வாத்தியம், பொன்னாடை, மலர்மாலை, வரவேற்ப்பு பாடல், நினைவுப் பரிசு என தடல் புடலான ஏற்பாடு.
இவை எதுவுமே வேண்டாம். தமிழர் பிரச்சினையை கூறுங்கள் என அவர்கள் தெரிவித்த போதிலும், அதனை எம்மவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இருந்தும் தமிழகத்தில் இருந்து வந்த எம்.பிக்கள் குழு அதனை நிராகரித்து விட்டன. அதுவொன்றே தமிழகக் குழுவிடம் விருப்பிற்குரிய செயலாக இருந்தது. இதற்கு மேலாக அந்தக் குழுவிடம் எதனையும் எதிர்பார்க்க முடியவில்லை.
எங்கள் கஷ்டகாலம் தமிழக குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமை ஏற்றிருந்தார். அட! ராமா! வந்த மனுஷன் யாழ். பொது நுலகத்தில் இருந்து, வந்தவர்களை அதட்டினார். நேரமில்லை என்று கூறி கருத்துக்களை தட்டிவிட்டார். ஒரு சிலர் கூறிய கருத்துக்களையும் அவர் செவி மடுக்கவில்லை.
வந்த குழு தமிழரின் அவலத்தை கேட்கும் என்றால் சுடுமூஞ்சி டி.ஆர்.பாலு எதற்குமே இடம் தரவில்லை.
ராவணன் காலத்தில் இலங்கைக்கு அனுமன் வந்ததுண்டு. ஆனால் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்த தமிழக எம்.பிக்கள் குழுவுக்கு சனீஸ்வரன் தலைமை ஏற்று வந்ததென்பதை யாழ் பொது நூலகத்திற்கு சென்ற பின்பே தெரிய வந்தது.
சனீஸ்வரனின் பார்வை கனிமொழியின் வாயை அடைத்தது. தொல்.திருமாவளவனை பேசவே விடாமல் தடுத்தது .
அப்படியானால் வந்தது சனீஸ்வரன் என்பதை புரிந்து கொள்வதுடன் டி.ஆர்.பாலு ஒரு தமிழ் உணர்வற்றவர் என்பதும் நிருபணமாகியுள்ளது.
அவரின் தலைமையுரை -யாழ் மக்களுடன் அவர் கலந்துரையாடிய நெறிமுறை, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுகத்திற்கு அவர் கொடுத்த கெளரவம் எதுவுமே பொருத்தமானதல்ல. இது அவரின் சிறுபான்மைத் தனத்தையே சுட்டிநிற்கின்றது.
எதுவாயினும் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியோர் எங்கள் அவல நிலையை எடுத்துரைப்பர் என்ற நம்பிக்கை மட்டுமே எஞ்சியுள்ளது என்று தெரிவித்துள்ளது.