அமெரிக்காவில் நிதி மோசடி: இலங்கை தமிழ் பில்லியனர் கைது
வாஷிங்டனில் கெல்லியான் குரூப் என்ற முதலீட்டு நிறுவனத்தை (hedge fund) நடத்தி வருபவர் பில்லியனரான ராஜ் ராஜரத்தினம். இவர் பங்குகளை விற்றதில் முறைகேடு செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள எப்.பி.ஐ. அதிகாரிகள், இவர் விடுதலைப் புலிகளுக்கும் நிதியுதவி செய்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள தமிழ் மறுவாழ்வு இயக்கம் ( Tamil Rehabilitation Organization) என்ற சமூக நல அமைப்புக்கு இவர் வழங்கிய 3.5 மில்லியன் டாலர் நன்கொடைகள் புலிகள் இயக்கத்துக்குப் போய்ச் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த பங்கு மோசடி தொடர்பாக ராஜரத்தினம் (52) தவிர மேலும் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக பங்குகளை விற்றதில் ராஜரத்தினமும் அவரது கூட்டாளிகளும் 20 மில்லியன் டாலர் வரை பணம் ஈட்டியுள்ளதாக எப்பிஐ கூறியுள்ளது.
இவரது கெல்லியான் குரூப் நிறுவனம் 3.7 பில்லியன் டாலர் அளவுக்கு பொது மக்களின் முதலீடுகளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தக்கு 7 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து உள்ளது.
ஆனால், ராஜரத்தினம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவரது வழக்கறிஞர் ஜிம் வால்டன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், இலங்கையில் சுனாமியில் இடிந்துபோன வீடுகளைக் கட்டத்தான் மேரிலாண்ட் சமூக சேவை நிறுவனத்துக்கு நன்கொடையை அளித்தார். அது விடுதலைப் புலிகளுக்குத் தரப்பட்டதல்ல. அவருக்கு புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை.
தமிழ் மறுவாழ்வு இயக்கத்துக்கு மிஸ்டர் பி என்பவர் நிதி அளித்துள்ளதாகவும், அது ராஜரத்தினம் தான் என்றும் எப்பிஐ கூறுவது கேலிக்கூத்தானது எனறார்.
இந் நிலையில் ராஜரத்தினம் சிக்கலில் மாட்டியுள்ளதால் பல இலங்கை இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் சட்ட விரோதமாக ஈட்டிய நிதியும் ராஜரத்தினத்தின் நிறுவனம் மூலம் பல நிறுவனங்களி்ல் முதலீடு ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிபர் ராஜபக்ஷே, முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசி்ங்கே உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களையும் ராஜரத்தினம் பலமுறை சந்தித்துள்ளார் என்கிறார்கள்.
புலிகள் இயக்கத்தில் உள்ள சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்க ராஜரத்தினம் 1 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கத் தயாராக உள்ளதாக கடந்த செப்டம்பரில் இலங்கை நீதித்துறை அமைச்சர் மிலிந்த மொரகோடாவிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரிடமிருந்து இந்த நிதியைப் பெறக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா அதிபர் ராஜபக்சேவிடம் கூறிவிட்டார்.
மேலும், ராஜரத்தினத்தி்ன் நிதி புலிகளுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் தனது துறை புகார் கூறியுள்ளதாகவும் ராஜபக்சேவிடம் பொகல்லகாமா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒபாமாவுக்கும், இப்போதைய அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனின் பிரச்சாரத்துக்கும் ராஜரத்தினம் பெருமளவில் நிதி வழங்கியுள்ளார்.
இவருக்கு இலங்கையின் டாப் 10 நிறுவனங்களிலும் முதலீடுகள் உள்ளன. இலங்கை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள மிகப் பெரிய தனிப்பட்ட முதலீட்டாரும் ராஜரத்தினம் தான்.
போர்ப்ஸ் இதழின் இந்த ஆண்டின் உலக பில்லியனர்கள் பட்டியிலில் 559வது இடத்தைப் பிடித்தவர் ராஜரத்தினம். இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர்களாகும். இதனால் இவர் நிதி மோசடி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவரை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டச் செய்துள்ளனர் அவருக்கு வேண்டாதவர்கள் என்கிறார்கள் ராஜரத்தினத்தின் வழக்கறிஞர்கள்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள ராஜரத்தினத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது நியூயார்க் நீதிமன்றம்.