வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 54,000 பேருக்கு வேலை-கனிமொழி
சிதம்பரம்: தமிழகத்தில் திமுக சார்பில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக மொத்தம் 54,000 பேருக்கு வேலை கிடைத்துள்தாக திமுக எம்பி கனிமொழி கூறினார்.
சிதம்பரம் ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபத்தில் நடந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மற்றும் நேர்காணலுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
அதில் பேசிய கனிமொழி,
இளைஞர்கள் வேலைக்காக பல்வேறு நிறுவனங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் நிலை இருந்தது. இந்நிலையை மாற்ற பல தனியார் நிறுவனங்களை அணுகி இளைஞர்களை ஒரே இடத்தில் சந்திக்க வைத்துள்ளோம்.
இதுவரை தமிழகத்தில் உதகை, விருதுநகர், கன்னியாகுமரி, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் 54,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் வேலை கிடைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
வேலை கிடைக்காதவர்கள் வேலைவாய்ப்பை எப்படி பெறுவது என்ற அனுபவத்தை இம்முகாம்கள் மூலம் பெற்றுள்ளனர்.
இளைஞர்கள் எந்த மாநிலத்தில், எந்த ஊரில் வேலை கிடைத்தாலும் வாய்ப்பை பயன்படுத்தி பணியில் சேர வேண்டும் என்றார்.
நேர்காணலுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு நவம்பர் 6,7,8ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறவுள்ளன.
இந்த முகாமில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
6,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்ட இந்த முகாமில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன், என்.சி.சி. அலுவலர் ஜெ.பாலசந்தர், தமிழாசிரியர் ஏழுமலை, பாண்டு ஆகியோர் இன்டர்வியூக்களில் பங்கேற்பது குறித்த பயிற்சியை வழங்கினர்.
இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் கலந்து கொண்டார்..
முகாமில் கனிமொழி பேசுகையில்,
சமுதாயத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பு, வசதி என இருந்ததை நீக்கி, இவற்றை அனைவருக்கும் ஏற்படுத்தித் தந்தது திராவிட இயக்கத்தின் வழித் தோன்றலான திமுக. அதனால் அதன் முதல்வர் கருணாநிதிக்கு பரிசளிக்கும் வகையில் இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறோம்.
இளைஞர்கள் வீட்டின் அருகிலேயே வேலை தேடுவதை தவிர்க்க வேண்டும். பெண்கள் மனத் தடைகளை நீக்கி கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.