நவ 1 முதல் மீ்ண்டும் ஸ்டிரைக்: ஏர் இந்தியா விமானிகள் எச்சரிக்கை!
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நஷ்டத்தைச் சரிகட்ட சம்பளக் குறைப்பு, செலவுக் குறைப்பு, பணியாளர் குறைப்பு என பல வழிகளைக் கையாண்டு வருகிறது ஏர் இந்தியா நிர்வாகம்.
இன்னொரு பக்கம் சம்பளத்தை உரிய நேரத்தில் தராமல் இழுத்தடிப்பதாகவும், ஆகஸ்ட் மாத சம்பளத்தில் 20 சதவிகிதம் மட்டுமே தந்துள்ளதாகவும், செப்டம்பர் மாதம் சம்பளம் இன்னும் தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மாதமும் சம்பளம் இல்லாமலேயே வேலை பார்த்து வருகிறார்கள் ஏர் இந்தியா பணியாளர்கள்.
இதைக் கண்டித்துதான் கடந்த மாதம் ஏர் இந்திய விமானிகள் 400 பேர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் 200 ஏர் இந்தியா விமானங்கள் ஓடாமல் முடங்கின. சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஆனாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
சம்பளம் தருவதில் இன்னும் நிர்வாகம் இழுத்தடிப்பதாகக் கூறியுள்ள இந்தியன் கமர்ஷியல் பைலட்டுகள் சங்கம், இப்பிரச்சினையை உடனடியாகத் தீர்க்காவிட்டால் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த சங்கத்தில் சுமார் 800 பைலட்டுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் குதி்த்தால், பெரும் பாதிப்புக்கு ஏர் இந்தியா உள்ளாகும் என அஞ்சப்படுகிறது.
ஆனால், இதற்கான அவசியம் இருக்காது என்றும், இந்த மாத இறுதிக்குள் பைலட்டுகளுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என்றும் ஏர் இந்திய விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர பர்கவா கூறியுள்ளார்.