எச்பிஓவின் 'டெரர் இன் மும்பை'
எச்பிஓ தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த டாகுமெண்டரிப் படம் இன்று (19ம் தேதி) அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
கசாப் பிடிபட்டவுடன் அவனிடம் மும்பை போலீசாரும், இந்திய உளவுப் பிரிவான ஐபி அதிகாரிகளும் நடத்திய விசாரணையின் ஆடியோ-வீடியோ பதிவுகளும் இதில் காட்டப்படவுள்ளன.
மேலும் மும்பையில் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானி்ல் உள்ள லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர்களுடன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் (இதை இந்திய உளவு அமைப்புகள் பதிவு செய்தன), தாஜ் ஹோட்டலின் குளோஸ் சர்க்யூட் கேமராக்களில் பதிவான தீவிரவாதிகளின் நடமாட்டம், செயல்கள் ஆகியவையும் இந்த டாகுமென்டரியில் காட்டப்படவுள்ளது.
நேற்று இந்த டாகுமெண்டரியின் சில பகுதிகள் அமெரிக்காவில் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. சிஎன்என் குழுமத்தின் மூத்த பத்திரிக்கையாளரான பரீத் சக்காரியாவின் ஜிபிஎஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இந்தப் பகுதிகள் காட்டப்பட்டன.
உளவுப் பிரிவினரின் விசாரணையில் பேசியுள்ள கசாப், எனக்கு வயது 22. என் அப்பா ஒரு ரொட்டிக் கடை வைத்துள்ள ஏழை. அவரது பணக் கஷ்டத்துக்காக என்னை லஷ்கர்-ஏ-தொய்பாவிடம் விற்றுவிட்டார்.
விற்கும் முன் என்னிடம் பேசிய என் தந்தை, அவர்களிடம் (லஷ்கர் அமைப்பிடம்) ஏராளமான பணம் உள்ளது. அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தால் நம் குடும்ப கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும். நாம் ஏழைகளாகவே இருக்க வேண்டியதில்லை. உன் தங்கை, அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க முடியும். நீயும் வசதியாக வாழ முடியும் என்று கூறியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பகுதியும் டாகுமெண்டரியில் அடங்கியுள்ளது.
இத்தனை பேரை கொல்கிறோமே என்று கொஞ்சம் கூட உனக்கு வேதனை ஏற்படவில்லையா என்ற ஒரு அதிகாரியி் கேள்விக்கு, வேதனை ஏற்பட்டது. ஆனால், சொர்க்கத்தில் கிடைக்கப் போகும் நல்வாழ்வுக்காக இதைச் செய்தேன் என்று கூறியுள்ளான் கசாப்.
மேலும் பாகி்ஸ்தானில் உள்ள பதாவுல்லா என்ற நபர் கசாபிடம் தொலைபேசியில் பேசுகையில், சகோதரா தைரியமாக இரு. பயப்படாதே. உன் குறிக்கோள் வெல்ல நீ கொல்லப்பட வேண்டும். கடவுள் உனக்காக காத்திருக்கிறார் என்கிறான். இந்த ஒலிப்பதிவும் டாகுமென்டரியில் இடம் பெறறுள்ளது.
இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல சினிமா திரைக்கதை ஆசிரியரும் தொலைக்காட்சி டாகுமென்டரி தயாரிப்பாளருமா டேன் ரீட்.
2002ம் ஆண்டில் ரஷ்ய திரையரங்கில் செசன்ய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக டெரர் இன் மாஸ்கோ என்ற டாகுமென்டரியைத் தயாரித்தவர் தான் ரீட். அதுவும் எச்பிஓவில் ஒளிபரப்பானது.
உணவில் மயக்க மருந்து-கஸாப் 'டுபாக்கூர்':
இந் நிலையில் சிறையில் தனக்குத் தரப்பட்டுள்ள உணவில் மயக்க மருந்து கலக்கப்பட்டுள்ளதாக கஸாப் கூறியுள்ளான்.
இந்த வழக்குத் தொடர்பாக சில நாட்களுக்கு முன் நீதிபதி தகில்யானியிடம் விசாரணைக்கு கசாப் கொண்டு செல்லப்பட்டபோது, சிறையில் தனக்கு தரப்பட்ட உணவில் கொஞ்சம் சாதத்தை போலீசாருக்குத் தெரியாமல் ஒரு பேப்பரில் மடித்து கொண்டு வந்தான்.
அதை நீதிபதியிடம் காட்டிய கஸாப், இந்த உணவில் மயக்க மருந்து கலக்கப்பட்டுள்ளது என்றான்.
இதையடுத்து அந்த உணவை பரிசோதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அதை மருத்துவ நிபுணர்கள் சோதனையிட்டதில் உணவில் எந்த மயக்க மருந்தும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகம் இன்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கஸாப் ஒரு பொய்யன். நல்ல நடிகன். வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் வழக்கை இழுத்தடிக்க புதிய நாடகத்தை அரங்கேற்ற முயற்சி செய்கிறான்.
அவனுக்கு ஆயுதப் பயிற்சி மட்டுமல்ல, பிடிபட்டால் எப்படியெல்லாம் பேச வேண்டும், நடிக்க வேண்டும் என்றும் பயி்ற்சி தரப்பட்டுள்ளது. அந்த பயிற்சியைத் தான் இப்போது பயன்படுத்துகிறான் என்றார்.