சட்டம்-ஒழுங்கு: மேற்கு வங்கத்தில் மத்திய குழு
கொல்கத்தா: மக்களவை தேர்தலுக்குப் பின் மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் மோதல்கள், நக்ஸல் வன்முறைகள் குறித்து விசாரிக்க மத்திய அரசால் அனுப்பப்பட்ட 3 உறுப்பினர் உயர்நிலைக் குழு அந்த மாநிலத்தி்ல் விசாரணை நடத்தியது.
ஆனால், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி கூறிய பகுதிகளுக்குச் சென்று விசாரணை நடத்தும் திட்டத்தை அந்தக் குழு ரத்து செய்துவிட்டது.
இந்தக் குழுவில் வருகைக்கு மாநிலத்தை ஆளும் இடதுசாரி அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. முடிந்தால் ஆட்சியைக் கலைத்துப் பார்க்குமாறும் சவால் விட்டது.
ஆனால், சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசுக்கு உதவி செய்யவே இந்தக் குழு அனுப்பப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில்
நிருபர்களிடம் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் டி.ஆர்.எஸ். செளத்ரி தலைமையிலான இந்தக் குழுவில் உள்துறை இயக்குனர் நீரஜ் கன்சால், இணை இயக்குனர் என்.கே. மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் குழு மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அசோக் மோகன் சக்ரவர்த்தி, உள்துறைச் செயலாளர் அர்தேந்து சென், மாநில காவல்துறைத் தலைவர் பூபிந்தர் சிங், உளவுப்பிரிவுத் தலைவர் அபராஜித முகர்ஜி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
லால்கர் பகுதியி்ல் இடதுசாரி ஆதரவாளர்களுக்கும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்த மோதல் சம்பவங்கள் குறித்து விசாரித்தனர்.
மோதல் எந்தச் சூழ்நிலையில் நடந்தது, மாநில அரசு அதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள்என்ன, எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், சமரசம் ஏற்பட எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றெல்லாம் கேட்கப்பட்டது.
மத்தியக் குழுவினர் தங்களிடம் விசாரணை நடத்திய பிறகு தலைமைச் செயலர் அசோக் மோகன் சக்ரவர்த்தி, முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜியைச் சந்தித்து விசாரணை குறித்த விவரத்தைத் தெரிவித்தார்.
'மழுப்பல்' சிதம்பரம்:
இந்த குழுவின் விசாரணை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், மத்தியக் குழுவினர் மேற்கு வங்கம் சென்றது அரசியல் சட்ட விரோத நடவடிக்கை அல்ல, சட்டத்துக்கு உள்பட்டே அவர்கள் சென்றுள்ளனர்.
மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமை மேம்பட மாநில அரசுக்கு உதவவும் அரசியல்ரீதியிலான மோதல் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவரவும்தான் அவர்கள் சென்றுள்ளனர். இதில் அரசியல் உள்நோக்கமோ, ஆட்சியைக் கலைக்கும் சதியோ ஏதும் இல்லை என்றார்.
மத்திய அரசுக்கு இடதுசாரிகள் சவால்:
இடதுசாரி முன்னணியின் அமைப்பாளர் பிமன் போஸ் இந்த விசாரணை குறித்து கூறுகையில்,
சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறி அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ் மேற்கு வங்க அரசைக் கலைத்துப் பாருங்கள். மத்திய அரசுக்கு அந்த தைரியம் உண்டா. இந்த விசாரணை பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.
இந்த விசாரணைக்கான விளைவை மத்திய அரசு நிச்சயம் அனுபவிக்கும்.
மூத்த மார்க்சிஸ்ட் தலைவரான சீதாராம் யெச்சூரி கூறுகையில்,
மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்று ஆராயத்தான் மத்தியக் குழு அனுப்பப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கூறுகிறார்;.
மாநில அரசுக்கு உதவத்தான் குழு செல்கிறது என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகிறார். இதில் ஏது உண்மை?.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் டெல்லியில் நடந்த சீக்கியர்கள் படுகொலை, கோத்ராவில் ரயில் எரிப்புக்குப் பிறகு குஜராத்தில் நடந்த மதக் கலவரம், மும்பையில் நடந்த மதக் கலவரம் ஆகிய எதிலுமே குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட மத்திய அரசு தான் இங்கு வந்து விசாரணை நடத்த வந்துவிட்டது என்றார்.
மேலும் இந்தக் குழுவை சந்தித்த இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு திரிமணமூல் காங்கிரஸ் எப்படியெல்லாம் காரணமாக இருந்தது என்பது குறித்த அறிக்கையையும் அளித்தனர்.
முன்னதாக மாநில அரசு அதிகாரிகளுடன் மதிய உணவருந்திக் கொண்டிருந்த மத்திய அரசு அதிகாரிகளை சாப்பிடும் இடத்துக்கே வந்து திட்டினார் திரிமணமூல் காங்கிரஸ் எம்பியான கல்யாண் பானர்ஜி.
நீங்கள் இங்கே விசாரணை நடத்த வந்தீர்களா.. சோறு திங்க வந்தீர்களா என்று பலர் முன்னிலையில் கேட்டு அவமானப்படுத்தினார்.
இந் நிலையில் இன்று மம்தா பானர்ஜி சொன்ன இடங்களுக்குச் சென்று விசாரிக்க இருந்த அந்தக் குழு தனது திட்டத்தை ரத்து செய்துவிட்டது.
இன்று பல மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களையும் சந்தி்க்கும் இந்தக் குழு தனது பயணத் திட்டத்தை குறைத்துக் கொண்டு இன்றே டெல்லி திரும்பவுள்ளது.