ஹவாலா உலகின் 'முடிசூடா மன்னன்' ஜெயின் கைது!
உலகம் முழுவதும் ரூ. 5,000 கோடியளவுக்கு ஹவாலா பணத்தை பரிமாற்றி வரும் இவரை மத்திய போதைப் பொருட் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவினர் பிடித்துள்ளனர்.
அரசுக்குத் தெரியாமல், முறைகேடாக பணத்தை வேறு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு இடம் மாற்றுவது தான் ஹவாலா பண பரிமாற்றம்.
இதன்மூலம் அன்னியச் செலாவணி சட்டங்களுக்கு எல்லாம் தண்ணி காட்டிவிட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி பறந்து கொண்டுள்ளன, ஒவ்வொரு நிமிடமும்.
இதில் கொடி கட்டிப் பறப்பது தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட அண்டர்வோல்ட் கும்பல்கள் தான். ஆனால், அவர்கள் எல்லாம் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் நிலையில் நரேஷ் சந்திர ஜெயின் மட்டும் டெல்லியில் வசித்தடி இதே வேலையை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
ஆனால், அரசியல்-சமூக செல்வாக்கு, ஆதாரங்கள் இல்லாமை ஆகிய காரணங்களால் இவரை இதுவரை சட்டத்தால் நெருங்க முடியவில்லை. இத்தனைக்கும் ஹவாலா விஷயத்தில் இவர் தான் உலகின் முடிசூடா மன்னன் என்கிறார்கள் அந்த வட்டாரத்தில்.
இந்திய ஏஜென்சிகள் இவர் விஷயத்தில் இத்தனை ஆண்டுகள் கண்டும் காணாமல் இருந்தாலும் இவரை அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு உளவுப் பிரிவுகள் சமீப காலமாக கண்காணிக்க ஆரம்பித்த பின்னர் நிலைமை மாறியது.
இவர் மூலமாக அல்-கொய்தாவுக்கும் பணம் போய்க் கொண்டுள்ளதாக இந்த இரு நாடுகளும் கருதுகின்றன. ஹவாலா வழியாக பணத்தை மாற்றிவிடுவதோடு அதற்கு இணையாக தங்கம், போதைப் பொருட்களையும் தனது நெட்வோர்க் மூலம் கண்டம் விட்டு கண்டம் தாவச் செய்து வருபவர் ஜெயின். இத்தாலியில் இவர் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கும் உள்ளது.
இவ்வாறு பிற நாடுகளின் கண்காணிப்பில் விழுந்துவிட்ட ஜெயினை அமலாக்கப் பிரிவினரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் நேற்று அதிகாலை வடக்கு டெல்லியி் பிதாம்புராவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
துபாயை மையமாக வைத்து 20 ஆண்டுகள் ஹாவாலா மோசடியில் ஈடுபட்டு வந்த அவர் சமீபத்தில் தான் தனது தளத்தை டெல்லிக்கு மாற்றினார்.
நியூயார்க் வங்கியில் உள்ள இவரது பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு கணக்கை 8 மாதங்களுக்கு முன் அமெரிக்க உளவுப் பிரிவு முடக்கியது. அதையொட்டி இவரது டெல்லி அலுவலகததை அமலாக்கப் பிரிவினர் சோதனையிட்டனர்.
பின்னர் ஜெயினை கைதும் செய்தனர். ஆனால், ஏதோ காரணங்களால் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஜெயினின் தம்பிகளான பிமல் ஜெயின், சத்பல் ஜெயின் ஆகியோரையும் அமலாக்கப் பிரிவினர் கைது செய்து விசாரி்த்து வருகின்றனர்.
ஜெயினின் நெட்வோர்க் நைஜீரியா, இத்தாலி, ஹாங்காங், துபாய், சீனா, பொலிவியா, காங்கோ என பரந்து விரிந்து கிடக்கிறது என்கிறது அமலாக்கப் பிரிவு.
டெல்லியில் உள்ள இவரது வீடுகளின் மதிப்பு மட்டும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாம்.
இப்போது இவர் மீது நடவடிக்கை பாய அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் காரணம் என்கிறார்கள்.