ஈழத் தமிழர்கள் இழந்த உரிமைகளைப் பெற மத்திய அரசு உதவ வேண்டும் - பட்ஜெட்டில் கோரிக்கை
சென்னை: இலங்கையில் தமிழர்கள் இழந்த வாழ்வுரிமைகளை மீண்டும் பெற்று வாழும் வகையில், மத்திய அரசு உதவி செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழக பட்ஜெட்டின்போது மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து பட்ஜெட்டின்போது நிதியமைச்சர் அன்பழகன் கூறுகையில்,
இலங்கையில் போரினால் வீடுகள், உறவுகளை இழந்து தமிழகத்திற்காக ஓடி வந்த தமிழ் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அவர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும் தமிழக அரசு ரூ. 100 கோடியை ஒதுக்கியது. அந்தப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
மேலும் இலங்கையிலிருந்து இங்கு வந்த தமிழர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வாழ்வுரிமையை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இலங்கையில் முகாம்களில் வசித்து வந்த தமிழர்களை தமிழக அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, மத்திய அரசு செயல்பட்டு இலங்கை அரசுடன் பேசி அவர்களை சொந்த ஊர்களுக்கு இடம் மாற்ற வழி வகை காணப்பட்டது.
மீதம் உள்ள தமிழர்களும் சொந்த ஊர்களுக்குச் சென்று வாழ, இழந்த வாழ்வாதாரங்களை அவர்கள் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு வரவேற்பு...
மகளிர் இட ஒதுக்கீடு முதல் முதலில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நாம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து நமது நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் வகையில், மக்களவையிலும், மாநில சட்டசபைகளிலும், 33 சதவீத ஒடு ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு ராஜ்யசபாவில் தாக்கல் செய்து நிறைவேற்றியதற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வர் கருணாநிதியின் ஆதரவும், ஆலோசனையும் இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்றியிருக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதை இங்கு நினைவு கூறுகிறன். விரைவில் இந்த மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.
சேது சமுத்திரத் திட்டம்...
சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற, அதில் குறுக்கிட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து விரைவில் இந்தத் திட்டத்தை முழுமையாக முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார் அன்பழகன்.