தமிழகம்-18 மாதங்களில் மூளைச்சாவு அடைந்த 77 பேர் உடல் உறுப்புகள் தானம்
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளை தானம் செய்த பள்ளி மாணவன் ஹிதேந்திரனுக்கு பிறகு, உடல் உறுப்புகள் தானம் செய்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 77 பேர் மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதில் 18 இதயங்கள், 77 இதய வால்வுகள், 65 கல்லீரல்கள், 152 சிறுநீரகங்கள், 112 கண்கள் போன்றவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடியவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக மரணமடைந்த ஒருவரின் உடலில் உள்ள தோலே எடுக்கப்பட்டு, இன்னொருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 15 பேர் மூளைச் சாவு அடைந்துள்ளனர். இதில், 15 பேரின் சிறுநீரகங்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கே பொருத்தப்பட்டுள்ளன.
மூளைச் சாவு அடைந்த ஒருவரின் கண்கள் 4 நாட்கள் வரை பாதுகாப்பாக வைத்து தேவைப்படுவோருக்கு பொறுத்தலாம்.
சிறுநீரகங்கள் ஒரு சில மணி நேரத்தில் பொருத்தப்பட வேண்டும். அப்போது தான் அது செயல்படும். இதனால் எந்த மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடல் உறுப்புகள் பொறுத்தப்பட்டு வருகின்றன.
உடல் உறுப்புகளை தானமாக ஆபரேஷன் மூலமாக எடுப்பதற்காக சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு தலைசிறந்த டாக்டர்கள் குழுவே உள்ளது. இந்த டாக்டர்கள் பகல், இரவு பாராமல் தங்கள் பணியை செய்து வருகின்றனர் என்றார்.
நெசவு தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்:
இந் நிலையில் கார் விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்ட ஆரணி நெசவு தொழிலாளி ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
2 கண்கள், சிறுநீரகம் ஆகியவை சென்னை மருத்துவமனையில் உயிருக்கு போராடுபவர்களுக்கு பொருத்தப்படவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த நெசவு தொழிலாளியான குப்பன் ( 45) சில நாட்களுக்கு முன் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் மோதி குப்பன் பலத்த காயமடைந்தார். வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் மூளைச் சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்க முடிவு செய்தனர். குப்பனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு அவரது 2 கண்கள், 2 சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை தானமாக எடுக்கப்பட்டன.
ஒரு சிறுநீரகம், கல்லீரல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 2 கண்கள் சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
இதன் மூலம் குப்பன் 5 பேருக்கு வாழ்வு அளித்துள்ளார்.