ஆந்திரா: 16 வயது மாணவனை மணந்த 30 வயது பெண்
கர்னூல்: ஆந்திராவில் 16 வயது மாணவனை 30 வயது பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவனை மீட்டுத் தருமாறு அவரது தாயார் மனித உரிமை ஆணையத்தில் புகார் தந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சைதம்மா. என்பவரின் மகன் சித்தய்யா (வயது 16). இவர் ஸ்ரீசைலத்தில் உள்ள ஐ.டி.ஐயில் படித்து வருகிறார்.
இவரது நண்பர் அசோக். சித்தய்யா அடிக்கடி அசோக் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அசோக்கின் சித்தியான சரஸ்வதிக்கும் (வயது 30-பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணமாகாத அந்தப் பெண்ணுக்கும் 16 வயதான சித்தய்யாவக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உறவும் வைத்துள்ளனர்.
இதையறிந்த அசோக்கின் குடும்பத்தினர் இருவருக்கும் அங்குள்ள கோவில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதையறிந்த சித்தய்யாவின் தாயார் சைதம்மா தனது மகனை மீட்டுத் தரக்கோரி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
என் மகனை ஏமாற்றி திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தால் அவன் படிப்பும், எதிர்காலம் நாசமாகிவிடும். மைனரான என் மகனை கட்டாய தாலி கட்ட வைத்த குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மகனை மீட்டுத் தர வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.