முல்லைப் பெரியாறு: கேரளா செல்லும் 12 சாலைகள் மறிக்கப்படும் - வைகோ
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் போக்கையும், செயலையும் கண்டித்து வருகிற 28ம் தேதி கேரளா செல்லும் 12 சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அறப்போர் களம் காணும் நாளான மே 28-ந் தேதி இதோ நெருங்கிவிட்டது. இந்த அறப்போராட்டம் நியாயமானது; மிகவும் தேவையானது - செந்தமிழ் நாட்டின் நலன்களைக் காக்க, வருங்காலத் தலைமுறையினரின் உரிமைக்கு அரண் அமைக்க.
முல்லைப்பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல், ஆகிய நதிநீர்ப் பிரச்சினைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்கிறது கேரளம். சட்டத்தை உடைக்கிறது, நீதியைக் குப்பையில் வீசுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே மிதித்து விட்டதே? அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் செயலைத்தானே மத்திய அரசு செய்கிறது?
இந்தப் போராட்டத்தை அவசரக் கோலத்தில் நடத்தவில்லை. மாதக்கணக்கில், வருடக்கணக்கில், பிரச்சினையை எடுத்து விளக்கி, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து மக்களை ஆயத்தப்படுத்தி உள்ளோம்.
போராட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்குவோர்:- வைகோ, டாக்டர் ஆர்.மாசிலாமணி, மல்லை சத்யா, திருப்பூர் சு.துரைசாமி - கோவை கந்தேகவுண்டன் சாவடி.
பழ.நெடுமாறன் (முல்லைப் பெரியாறு உரிமை மீட்புக் குழு), கம்பம் கே.எம்.அப்பாஸ் (விவசாயிகள் சங்கம்), சேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக்) - தேனி மாவட்டம் குமுளி ரோடு லோயர் கேம்ப்.
நாசரேத் துரை, எஸ்.ரத்தினராஜ், ஆர்.ஞானதாஸ் எம்.எல்.ஏ. - கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை.
துரை.பாலகிருஷ்ணன் - கம்பம் மெட்டு.
அ.கணேசமூர்த்தி எம்.பி., செ.நல்லுசாமி (தமிழ்நாடு கள் இயக்கம்), என்.எஸ்.பழனிசாமி (விவசாயிகள் சங்கம்), ஆடிட்டர் மு.பாலசுப்பிரமணியம் (விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு), மு.செந்திலதிபன் - கோவை மாவட்டம் உடுமலை சோதனைச்சாவடி.
நாஞ்சில் சம்பத், டாக்டர் தி.சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., ஆர்.வரதராசன் எம்.எல்.ஏ. - நெல்லை மாவட்டம் செங்கோட்டை எல்லை.
கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன் (பெரியார் திராவிடர் கழகம்) - கோவை வடக்கு ஆனைகட்டி சோதனைச்சாவடி.
தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) - பொள்ளாச்சி வளந்தாயமரம் சோதனைச்சாவடி.
பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) - பொள்ளாச்சி நடுப்புணி சோதனைச்சாவடி.
உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) - பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச் சாவடி.
அர்ஜுன் சம்பத் (இந்து மக்கள் கட்சி) - கோவை தெற்கு வேலந்தாவளம் சோதனைச் சாவடி.
பி.வி.கதிரவன் (அகில இந்திய பார்வர்ட் பிளாக்) - தேனி மாவட்டம் போடி மெட்டு.
இப்பிரச்சினையில், தமிழகம் கொந்தளிக்கிறது; என்பதை, உச்சநீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் உணர்த்துவது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்த அறப்போர், கேரள மக்களுக்கு, உண்மையை உணர்த்தட்டும். நியாயத்தின் கதவுகள் திறப்பதற்கு வழி அமைக்கட்டும்.
28-ந் தேதியோடு போராட்டம் நின்றுவிடாது. உரிமை காக்கும் அறப்போர்ப் பயணத்தில், இதுவும் ஒரு மைல் கல் ஆகும். கேரள முற்றுகை-சாலை மறியல்' அறப்போரில் 12 சாலைகளிலும் பங்கு ஏற்கும் தலைவர்களோடு, ம.தி.மு.க. தொண்டர்கள் அனைத்து இடங்களிலும் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க நடைபெறும் இந்த அறப்போரில் விவசாயப் பெருமக்களும், அனைத்துத் தரப்பினரும் அரசியல் எல்லைகளைக் கடந்து பெருமளவில் பங்கேற்க வருமாறு அன்போடு வேண்டுகிறேன் என்று அழைத்துள்ளார் வைகோ.