மகாராஷ்டிர டிஜிபியானார் 'மிஸ்டர் க்ளீன்' தனுஷ்கோடி சிவானந்தன்
தனுஷ்கோடி சிவானந்தன், மும்பை போலீஸ் ஆணையராக சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றதும் இவரது ஆசை ஐஏஎஸ் என்றாலும் ஐபிஎஸ் கை கொடுக்க 1976 ம் பேட்சில் ஐபிஎஸ் முடித்தார்.
மராட்டியத்தில் இவருக்கு முதல் பணி 1981ம் ஆண்டு மராட்டிய மாநிலம் மேற்கு கடற்கரை மாவட்டமான (கொங்கன் நீங்கலாக) சிந்து துர்க் மாவட்ட எஸ்.பியாக பணியேற்றார்.
கடற்கரை மாவட்டத்தில் பல கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை திறமையாக தடுத்து நிறுத்திய, சிவானந்தன் 1987ம் ஆண்டு மும்பை சிறப்பு திறனாய்வு பிரிவின் சூப்பிரடெண்டாக பதவி ஏற்றார்.
தாதாக்களின் போட்டி சண்டைகள் மும்பை நகர வீதிகளில் கோரதாண்டவம் விரித்தாடிய சமயம் அது. சுமார் 40 வருட விஷ விருட்ஷம் உடனே இதை முறிக்க முடியாது என்று அறிந்த சிவானந்தன் அதற்கான திட்டங்கள் வகுத்தார், இவரது திட்டங்களை செயல்படுத்த மும்பை காவல்துறை இவரை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக பதவி உயர்வு தந்து இவரது திட்டங்களுக்கு எந்த தடையும் வராமல் பார்த்து கொண்டது.
முதலில் இவர் தனக்கு கீழ் திறமையான குறிபார்த்து சுடுவதில் வல்லமை படைத்த ஒரு டீமை உருவாக்கி கொண்டார். அதன் பிறகு தொடங்கியது வேட்டை. சுமார் 200 தாதாக்களை எமலோகத்திற்கு அனுப்பினார்.
இந்த அதிரடி நடவடிக்கையை முதலில் ஏதோ என்று நினைத்தவர்கள், பிறகு வரிசையாக எண் விழுவதை கண்டதும் அடுத்த எண் நமக்கு தான் என்று தெரிந்து தானாகவே சரணடைந்தனர், அல்லது இந்தியாவை விட்டு ஓடி விட்டனர். சிவானந்தன், ஐபியின் சிறப்பு இணை கமிஷனராகவும், சிபிஐ இணை டைரக்டராகவும் பணியாற்றினார்.
இவரது காலகட்டத்தில் துணிச்சலுடன் பெரும் பணக்காரரும் வைர வியாபாரியும், பாலிவுட் தயாரிப்பாளருமான பரத் ஷா கைதானார், இந்த கைது பாலிவுட் உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, ஷாவை இயக்குவது தாவூத அன்ட் கம்பெனி என்ற விபரத்தை தந்தது மட்டுமல்லாமல் சுமார் 1 டஜன் திரைப்பட நாயக நாயகிகளை பிடித்து உள்ளே போட்டார்.
தானே நகர போலீஸ் கமிஷனராக இருந்த காலகட்டத்தில் காவலர் குடும்ப நலத்திற்காக பல திட்டங்களை வகுத்து அதை நிறைவேற்றி தந்தார்.
மும்பை தாக்குதலையடுத்து ஹசன் கபூர் தனது கமிஷனர் பதவியை துறக்க ஏற்கனவே மும்பையில் துணை கமிஷனராக பணியாற்றிய அனுபவத்தையடுத்து தானே கமிஷனராக இருந்த சிவானந்தன் மும்பை நகர கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இவரது கடந்த ஒரு வருட கால கட்டத்தில் சில்லரை குற்றங்கள் ஆங்காங்கே நடந்ததே தவிர பெரிய அளவில் குற்றங்கள் தடுக்கபட்டன. இவரது சீரான பணியின் காரணத்தால் டிஜிபி ஆகியிருக்கும் சிவானந்தன் தன்னுடைய பணிக் காலத்தில் மிஸ்டர் கிளீன் என்று பெருமைப் படும் பெயரை மகாராஷ்டிர காவல்துறை மத்தியில் பெற்றிருக்கிறார்.
ஐபிஎஸ் அதிகாரியாகும் முன் தமிழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர் சிவானந்தன் என்பது குறி்ப்பிடத்தக்கது.
தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், சிறந்த இந்தியராகவும் செயல்பட்டு ஒட்டு மொத்த இந்தியக் காவல்துறைக்கும் பெருமை சேர்ந்துள்ளது சிவானந்தனால்.