பிரசாரத்துக்கு மோடி-வருண் வரக்கூடாது: பாஜகவுக்கு நிதிஷ்குமார் திடீர் நிபந்தனை
இதையடுத்து குஜராத் முதல்வர் மோடி தந்த விளம்பரத்தை வைத்து பாஜகவுடன் மோதலை ஆரம்பித்தார். ஆனால், பாஜக தனித்துப் போட்டியிடும் நிலையில் இல்லாததால் கூட்டணியை முறிக்கத் தயாராக இல்லை.
ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியைக் கவிழ்த்தால், அமைச்சர்களாக உள்ள தனது கட்சி எம்எல்ஏக்கள் பதவி இழப்பதோடு, நிதிஷ்குமாருக்கு ஆதரவாக அனுதாப அலை உருவாகிவிடும் என்றும் பாஜக அஞ்சுகிறது.
இதனால் நிதிஷ்குமார் என்ன திட்டு திட்டினாலும் இதுவரை பொறுமையாகவே இருந்து வருகிறது.
இந் நிலையில் நிதிஷ்குமார் தனது அடுத்த அஸ்திரத்தை வீசியுள்ளார். பாஜகவுக்கு புதிய நிபந்தனையை விதித்துள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது பிகாருக்குள் நரேந்திர மோடியையோ, வருண் காந்தியையோ பாஜக பிரச்சாரத்துக்கு அழைத்து வரக் கூட்து என்று அவர் நிபந்தனை போட்டுள்ளார்.
இதையடுத்து அவரை சமாதானப்படுத்த மாநில பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான சுஷில் மோடி பேச்சு நடத்தினார். ஆனால் நரேந்திர மோடி, வருண் காந்தியை இருவரையும் பிகாரை விட்டு தூரத்தில் வைக்க வேண்டும், இல்லாவிட்டால் கூட்டணியை உடைக்கவும், ஆட்சியை இழக்கவும் தயார் என்று நிதிஷ் கூறிவிட்டார்.
மேலும் அடுத்த தேர்தலில் வெல்வது, தோற்பது பற்றியும் எனக்குக் கவலையில்லை. இந்த இருவர் விஷயத்தில் நான் சமரசத்துக்குத் தயாராக இல்லை என்று டெல்லி பாஜக தலைவர்களிடமும் நிதிஷ் தெரிவித்துவிட்டதாக ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதிஷ்குமார் சொல்வதைப் போல மோடியையும், வருணையும் தூர வைப்பதே நல்லது, அவர்களை பிகாரில் பிரச்சாரத்துக்கு அழைத்தால் பாஜகவுக்கு நஷ்டம் தான் ஏற்படும் என்று மாநில பாஜக தலைவர் சி.பி.தாகூர் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் டெல்லி தலைவர்களிடம் கூறியுள்ளனர்.
இதனால் பாஜக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக மோடி-அத்வானி-அருண் ஜேட்லி ஆகியோர் நிதிஷ்குமாரின் நிபந்தனை மற்றும் அதை மாநிலத் தலைவர்கள் ஆதரிப்பதால் எரிச்சலடைந்துள்ளனர்.
இதையடுத்து இது குறித்து விவாதிக்க மாநில பாஜக தலைவர்களை இன்று டெல்லிக்கு அழைத்துள்ளார் அக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி.