எண்ணெய் நிறுவனங்களுக்கு எதற்கு மானியம்?-அலுவாலியா நியாயமான கேள்வி
கரன் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் டிவி நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய அரசு வழங்கும் மானியத்தால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம்தான் அதிகரிக்கிறது. லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கு எதற்கு மானியம்?.
எண்ணெய் நிறுவனங்கள் இப்போது லாபத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால் இப்போதும் அவற்றை வீழ்ச்சியில் இருந்து மீட்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. 2009-10ம் ஆண்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ. 10,220 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அரசு வழங்கும் அதிகபடியான மானியம் தான் இவ்வளவு அதிக லாபத்துக்கு முக்கியக் காரணம்.
ஆனால், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இந்த மானியத்தை மத்திய அரசுவழங்கினால் அது மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
பொதுமக்கள் தங்களது பைக், கார்கள் போன்றவற்றை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து, முடிந்த அளவுக்கு பேருந்து, ரயில் போன்றவற்றை பயன்படுத்த அரசு அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும்..." என்றார் அலுவாலியா.
ரோடு போடும் கமல் நாத்-மாண்டேக் சூடு:
அண்மையில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கமல்நாத், "திட்டக்குழு கட்டளையிடும் அதிகார அமைப்பாகத்தான் உள்ளது; அதன் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. மான்டேக் சிங் அலுவாலியா ஏசி ரூமில் சேரில் அமர்ந்து கொண்டு கட்டளைகள் பிறப்பிக்கத் தான் லாயக்கு என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து கரன் தாப்பக் அலுவாலியாவிடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில்,
"ரோடு போட தெரிந்தவர்களை மட்டும் (சாலைப் போக்குவரத்து அமைச்சர் கமல் நாத்தை மறைமுகமாக குறிப்பிட்டு) வைத்துக் கொண்டு நாட்டை நடத்திவிட முடியாது. திட்டங்களை வகுத்துக் கொடுப்பதன் மூலம்தான் பணிகள் விரைவாகவும், சிறப்பாகவும் நடைபெறும்.
நாட்டின் வழிகாட்டு நெறிமுறைகள் ரோடு போடும் வேலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. நாங்கள் திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பு இல்லை. திட்டங்களை சொல்பவர்கள், அதைச் செய்ய வேண்டியது அரசு தான் என்றார் மகா காட்டமாக.
கமல் நாத் காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவர். மாண்டேக் சிங் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தோஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது.