கடல் நிலத்தை விற்று இந்தியன் ஆயில் நிறுவனத்தை மோசடி செய்தவர் கைது
சென்னை: வடிவேலுவுக்கு சுடுகாட்டை விற்று அன்று மோசடி செய்தார்கள். அவராவது
பரவாயில்லை, இன்று கடல் நிலத்தை விற்று ஒரு மகா பலே மோசடியைச் செய்துள்ளார் ஒரு
நபர்.
கடவுள் பாதி, மிருகம் பாதி என்று ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசன் பாடுவது போல,
கடலில் பாதி நிலத்தையும், நிலத்தில் உள்ள மீதி நிலத்தையும் சேர்த்து விற்று
இந்த பெரும் மோசடி நடந்துள்ளது.
மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் (60). இவர் கடந்த
25 வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரது தொழிலே மோசடியாக நிலங்களை விற்பதுதான். போலியான பத்திரங்களைத் தயார்
செய்து விற்பது இவரது பொழுது போக்கு போலவே இருந்து வந்துள்ளது.
இவர் குறித்து பொதுமக்கள் போலீஸில் பல புகார்கள் கொடுத்தும் பயன் இல்லை. இவரை
எதிர்த்து கம்யூனிஸ்டுகளும் கூட பலமுறை போராட்டங்களை நடத்திப் பார்த்து
விட்டனர். ஆனாலும் போலீஸ் தரப்பிலிருந்து ஒரு நடவடிக்கையும் இல்லை என்று
தெரிகிறது.
இந்த நிலையில் இவர் மீது மணலியை சேர்ந்த டேவிட்மணிநேசன் என்பவர் திருவள்ளூர்
பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை வழங்கினார்.
தேவதாஸ் எனக்கு நிலம் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அவர் மீது
நம்பிக்கை வைத்து அவரிடம் இருந்து அத்திப்பட்டு பகுதியில் ரூ.46 லட்சம் செலவில்
2 ஏக்கர் நிலம் வாங்கினேன். பின்னர் என் பெயருக்கு அந்த நிலத்தை பெயர் மாற்றம்
செய்ய முயன்ற போது தான் அந்த நிலம் வேறு ஒருவர் பெயரில் உள்ளது தெரிய வந்தது.
இது குறித்து நான் தேவதாசை அணுகி கேட்டபோது அவரிடம் இருந்து சரியான பதில்
கிடைக்கவில்லை. பின்னர் தான் அவர் இதே போல் ஒரே நிலத்தை பலருக்கு விற்பனை
செய்துள்ளது தெரியவந்தது எனக் கூறியிருந்தார்.
இதேபோல் அண்ணாநகரைச் சேர்ந்த விவேக் என்பவரும் தேவதாஸ் மீது புகார் தெரிவித்து
இருந்தார்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவின்
பேரில் பொன்னேரி துணை சூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் மீஞ்சூர்
இன்ஸ்பெக்டர் முகமது நசீர், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தேவதாசை கைது
செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் குறித்து டிஎஸ்பி ரங்கராஜன் கூறுகையில்,
தேவதாஸ் ஒரே நிலத்தை போலியான பெயர்களிலும், போலியான ஆவணங்கள் மூலமும் போலியான
நபர்களை கொண்டு பலருக்கு விற்பனை செய்து உள்ளார்.
போலியான ஆவணங்களைத் தயார் செய்து இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு 106 ஏக்கர்
நிலத்தை விற்பனை செய்துள்ளார்.
அந்த நிறுவனம் அந்த நிலத்தை அளந்து பார்த்த போது 20 ஏக்கர் முதல் 25 ஏக்கர்
நிலம் மட்டுமே நிலப்பரப்பாகவும், மீதி பகுதி கடலாக உள்ளதாகவும் தெரிய வந்தது என
அந்த நிறுவன நிர்வாகி பாண்டியன் புகார் தெரிவித்து உள்ளார். சுமார் 81 ஏக்கர்
கடலுக்குள் உள்ளது. மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய்
இருக்கும்)
நாங்கள் தேவதாசை கைது செய்துள்ளது தெரியவந்ததும் மேலும் பலர் அவர் மீது இதே
போல் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். புகார்களின் மீது உயர் அதிகாரிகளின் ஆலோசனை
பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
என் கிணத்தைக் காணோம் என்று வடிவேலு அன்று பதறியதைப் போல இன்று நிலத்தைக்
காணோம் என்று இந்தியன் ஆயில்நிறுவனத்தையே பதற வைத்து விட்டார் தேவதாஸ்.












Click it and Unblock the Notifications