கர்நாடகத்தில் காட்டாட்சி-355வது பிரிவை பயன்படுத்த வேண்டும்: ஆளுநர்
கர்நாடக அரசுக்கு எதிராக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் தற்போது மாநில ஆளுநர் பரத்வாஜும் இணைந்து போராட்டத்தில் குதித்துள்ளார்.
டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் கர்நாடக அரசுக்கு எதிராக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார்.
ரெட்டி சகோதரர்களை பகிரங்கமாக குற்றம் சாட்டிய அவர் தற்போது கர்நாடகத்தில் காட்டாட்சி நடப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பரத்வாஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் அரசியல் சாசனத்தின் 355வது பிரிவை பயன்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சுரங்கத் தொழில் நடந்து வருவது, லோகாக்யுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே விலக முன்வந்தது ஆகியவை இதை வலியுறுத்துவதாக உள்ளன.
கர்நாடகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. அங்கு காட்டாட்சி நடந்து வருகிறது. ஊழல் அமைச்சர்களால் அரசு செயல்பட முடியாத நிலை நிலவுகிறது. எனவே மாநில விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வேண்டியது அவசியமாகும்.
ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தையும் நான் குற்றம் சாட்டவில்லை. பெல்லாரியில் மட்டுமே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமை நன்றாகவே உள்ளது.
சில அமைச்சர்கள் தங்களுக்கேற்றபடி உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொள்கின்றனர்.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக நான் கூறிய பல யோசனைகளை முதல்வர் எதியூரப்பா கேட்டு செயல்படுத்தியுள்ளார். அதை நான் மறுக்கவில்லை. சில பல்கலைக்கழகங்களுக்கு எனது யோசனையின் பேரில் அவர் துணைவேந்தர்களையும் நியமித்துள்ளார். அதையும் நான் மறுக்கவில்லை. இருப்பினும் நான்கு அல்லது ஐந்து அமைச்சர்களால் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும், அரசுக்கும் பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது என்றார் பரத்வாஜ்.
355வது சட்டப் பிரிவு என்பது, ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்தால், அரசு நிர்வாகம் செயலிழந்தால், அதன் அதிகாரங்களை மத்திய அரசே கையில் எடுத்துக் கொள்ளும். மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட வகை செய்வதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளிருப்புப் போராட்டம்-கர்நாடக எம்.எல்.ஏக்கள் சாதனை!
இதற்கிடையே இன்று 4வது நாளாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பபுப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தங்களது கோரிக்கை நிறைவறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் காரணமாக சட்டசபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை சட்டசபை கூடியபோது உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 45 எம்.எல்.ஏக்களும் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி அவையை நடத்தக் கூடாது என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். இதனால் அவையை நடத்த முடியாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இந்தியாவில் சட்டசபை ஒன்றில் எம்.எல்.ஏக்கள் 4 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.