சமூக நீதிக்காக உண்மையாக பாடுபடும் இயக்கம் திமுக-கருணாநிதி
சென்னை: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூக நீதியில் உண்மையான ஈடுபாட்டுடன் தொடர்ந்து பாடுபட்டு வரும் இயக்கம் திமுக என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடஒதுக்கீடு பற்றி 1994 ம் ஆண்டில் அகில இந்தியத் தலைவர்களுக்கெல்லாம் நான் எழுதிய கடிதங்கள் குறித்தும், அதற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்து எழுதிய பதில் கடிதங்கள் குறித்தும் விரிவாக விளக்கியிருக்கிறேன்.
அதற்குப் பிறகு 1996ம் ஆண்டு நான்காவது முறையாகத் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு உறுப்பினர்கள் ஞானசேகரன், சுப்பராயன், தாமரைக்கனி, பேராசிரியர் தீரன் ஆகியோர் இடஒதுக்கீடுப் பிரச்சனை குறித்து 16.8.1996 அன்று சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள்.
அன்றைய தினமே அதற்கு பதிலளித்தபோது, கடந்த காலத்திலே இந்த அவையிலே நிறைவேற்றப்பட்டு 9வது அட்டவணையிலும் சேர்க்கப்பட்ட சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது கடந்த அரசின் காலத்தில் அரசு வழக்கறிஞர்கள் நினைவூட்டவே தவறிவிட்டதை உச்ச நீதிமன்றத்தினுடைய நீதிபதிகள் அந்தத் தீர்ப்பிலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் பொறுப்பிலே 2006ம் ஆண்டு ஐந்தாவது முறையாக அமர்ந்த நான் அந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இந்தக் கடிதத்திற்கு முன்பே 9.10.2006 அன்று சோனியா காந்திக்கு இட ஒதுக்கீடு பிரச்சனையில் ஐந்து பக்கங்கள் கொண்ட விவரமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.
இவ்வாறு தொடர்ந்து 1920ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக இட ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்து வந்ததின் பயனாகத்தான் நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல வெற்றியும், தோல்வியும் மாறி மாறி கிடைத்து வருகிறது என்பதின் அடையாளமாக, கடந்த 13.7.2010 அன்று உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சுதந்திர குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பு நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
பாலைவனத்தில் குடிநீர் கிடைக்காமல் வேகாத வெயிலில் சென்று கொண்டிருந்தவர்களுக்கு வழியிலே ஒரு சிறிய நீருற்று தென்பட்டதைப்போல, தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த தீர்ப்பு அமைகிறது என்றால் மிகையல்ல.
இந்த வெற்றியிலும் மகிழ்ச்சியிலும் நாம் உரிமை கொண்டாடுவதற்கு ஆட்சியில் நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திராவிட இயக்கத்தின் சமூக நீதி கொள்கையை தொய்வில்லாமல் பாதுகாத்து நிறைவேற்றி வருகிறோம் என்பதற்கு நீதி மன்றங்களில் நாம் நடத்திவந்துள்ள சட்ட ரீதியான சமூக நீதிப் போராட்டங்களும் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் பெரும் காரணங்களாகும்.
வன்னியப் பெருமக்களும், சீர் மரபினர்களும் மற்றும் சில வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலில் இணைக்கப்பட்டு, 20 விழுக்காடு எனப் பயன் பெறவும் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ள ஒதுக்கீடாக இஸ்லாமியப் பெருமக்கள் 3.5 விழுக்காடு பெறவும் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக அருந்ததியப் பெருமக்கள் 3 விழுக்காடு பெறவும் தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடு, பழங்குடி இன மக்களுக்கென தனியே ஒரு விழுக்காடு வழங்கியதும் சமூக நீதியில் இந்த இயக்கத்திற்கு உள்ள அக்கறைக்கான எடுத்துக்காட்டுகளாகவும்
அதனால் தான் அண்மையில் வந்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை தேன் துளிகளாகவும், இது தேனருவியாக மாறுகின்ற அளவுக்கு சமூக நீதிப் பயணத்தில் முழுமையான வெற்றியைப் பெற வேண்டுமென்றும் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.