காமன்வெல்த் நிதியில் பெரும் முறைகேடு-விசாரணை நடத்த இங்கிலாந்து அரசு உத்தரவு
லண்டன்: காமன்வெல்த் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரணை நடத்த இங்கிலாந்து அரசின் வருவாய் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லண்டனில் க்வீன்ஸ் பேட்டன் ஓட்டம் தொடங்கியபோது, இங்கிலாந்தைச் சேர்ந்த ஏஎம் பிலிம்ஸ் யுகே லிமிட்டெட் என்ற நிறுவனத்திற்கு, அவர்கள் செய்த சேவைக்குப் பிரதியுபகாரமாக கிட்டத்தட்ட ரூ.1.68 கோடி பணத்தை அளித்துள்ளனர். இதில்தான் முறைகேடு நடந்திருப்பதாக இங்கிலாந்து அரசு கருதுகிறது.
இந்த விசாரணை தொடர்பாக லண்டனில் உள்ல இந்திய தூதரகத்திற்குக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய அரசுக்கு தூதரகம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட ரூ. 1.68 கோடி தவிர மாதந்தோறும் ரூ. 17 லட்சம் பணம் இங்கிலாந்து நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இங்கிலாந்து நிறுவனத்திற்கு மொத்தமாக ரூ. 3.06 கோடி வரை பணம் தரப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஏஎம் பிலிம்ஸ் யுகே லிமிட்டெட் நிறுவனத்தின் லண்டன் அலுவலகம், ஏஎம் வெஹிக்கிள்ஸ் ஹயர் லிமிட்டெட் என்ற பெயரில் இயங்கி வருகிறதாம். அதன் இயக்குநர் ஆசிஷ் படேல் என்பவர் ஆவார். இவர் கடந்த ஜூலை 14ம் தேதியே ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டார்.
கடந்த மார்ச் மாதம் ஏஎம் நிறுவனத்திற்கு நிதி வழங்குவதற்கு விதிக்கப்படும் வாட் வரியை ரத்து செய்யக்கோரி காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழு இங்கிலாந்து வருவாய்த்துறையிடம் கோரியபோதுதான் அதில் முறைகேடு நடந்திருப்பதாக அறிந்ததாம் வருவாய்த்துறை. இதையடுத்தே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உடனடியாக குழு அமைக்கப்பட்டு அது விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
ஏஎம் பிலிம்ஸ் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட கான்டிராக்டில் ஏதாவது குளறுபடி இருக்கிறதா என்பதை இந்த விசாரணைக் குழு ஆராய்ந்து வருகிறதாம்.
இதுதொடர்பாக இங்கிலாந்தின் வருவாய், சுங்கத்துறை அதிகாரியான மீரா ராஜா என்பவர், கடந்த ஜூன் 7ம் தேதி இந்திய தூதர் நளின் சூரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவுக்கும், ஏஎம் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் ஏதும் செய்யப்படாததை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், டென்டர் நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமான எதுவுமே இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் இந்தப் புகார்களை காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் லலித் பேனட் மறுத்துள்ளார். இந்தப் புகார்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். எந்தவிதமான நிதி முறைகேடும் எங்கள் பக்கத்திலிருந்து நடக்கவில்லை.
கட்டணம் செலுத்துவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் முறையாகத்தான் செய்துள்ளோம். இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி உள்ளிட்டவை முறையாக பெறப்பட்டுள்ளது என்றார்.
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் இதுகுறித்து கேட்டபோது, இதுகுறித்து நான் நிச்சயம் விசாரிப்பேன் என்றார்.
வீடியோ சாதனங்களை வாங்குவதற்காக ஏஎம் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு 22701021 என்ற கணக்கு எண்ணுக்கு 2,47,469 பவுண்டு பணத்தை அனுப்பியிருப்பதாக காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு கூறியுள்ளது. ஆனால், தாங்கள் வாடகைக் கார்கள், தற்காலிக கழிப்பறைகள் கட்டித் தருவது, மின்சாரம் உள்ளிட்ட சேவைகளை புரிந்ததாக ஏஎம் நிறுவனம் கூறுகிறது. இந்த முரண்பாடுதான் நிதி முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இங்கிலாந்து அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்த குளறுபடி குறித்து ஜூன் 14ம் தேதி இந்திய தூதரக அதிகாரிகளை இங்கிலாந்து அதிகாரிகள் சந்தித்து ஆலோசித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications