ஜாதிவாரி கணக்கெடுப்பு: ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு-பாஜகவில் குழப்பம்
பாஜகவின் பி்ற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தலைவர்களான கோபிநாத் முண்டே போன்றவர்கள், ஜாதிவாரி சென்ஸஸ் நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த எம்பியான அனந்த்குமார் மற்றும் பலர் இந்த சென்ஸசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனால் முடிவெடுக்க முடியாமல் அந்தக் கட்சி திணறி வருகிறது. முதலில் ஜாதிவாரி சென்ஸசுக்கு பாஜக எதிர்ப்புத் தெரிவித்தது. அதே போல ஆளும் காங்கிரசில் உள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த கபில் சிபல், ஆனந்த் சர்மா போன்ற அமைச்சர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், திக்விஜய் சி்ங், வீரப்ப மொய்லி போன்ற மூத்த தலைவர்கள் இதை ஆதரித்து வருகின்றனர். ஆனால், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம இந்த விஷயத்தில் நடுநிலை வகிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந் நிலையில் ஜாதிவாரி சென்ஸஸ் நடத்த மறுத்தால், இது தொடர்பாக வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து காங்கிரசின் பிற்படுத்தப்பட்டோர் எதிர்ப்பு நிலையை வெளிச்சம் போட்டு காட்டுவோம் என்று லாலு-முலாயம் சிங் ஆகியோர் மிரட்டல் விடுத்ததாலும், இப்படி ஒரு தீர்மானம் வந்தால் அதை எதிர்த்து வாக்களிக்க முடியாது என்று திமுக, திரிணமூல் காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகள் கூறிவிட்டதாலும் காங்கிரஸ் தனது நிலையை மாற்றிக் கொண்டது.
இதையடுத்து ஜாதிவாரி சென்ஸசுக்கு காங்கிரஸ் ஒப்புக் கொண்டது. அதே நேரத்தில் பாஜகவில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இதை எதிர்த்தால் பி்ற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை காங்கிரஸ் அள்ளிவிடும் என்பதால் முதலில் இதை எதிர்த்த பாஜக பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டு ஜாதிவாரி சென்ஸஸை ஆதரிப்பதாக அறிவித்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் நோக்கத்தை சிதறடிக்காமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என்று இந்தப் பிரச்சனை தொடர்பான அமைச்சர்கள் குழுவுக்கு தலைமை வகிக்கும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மக்களவை பாஜக எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதை ஆர்எஸ்எஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த சென்ஸஸை நடத்தினால் ஜாதி, இனம், மொழி, மதம் போன்றவற்றால் இந்தியாவில் பிரிவினை எண்ணம் தலைதூக்கும் என்பது ஆர்எஸ்எஸ் வைக்கும் வாதம்.
இதனால் பாஜகவில் உள்ள மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்த சென்ஸஸை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து பாஜகவின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ஸஸ் நடத்த எங்களது கருத்தை ஏன் காங்கிரஸ் கேட்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் அனந்த்குமார்.
இதை எதிர்த்தால் பிற்படுத்தப்பட்டவர்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால் ஆர்எஸ்எஸை சமாதானப்படுத்தும் வேலையில் சில பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
'பிற்படுத்தப்பட்டவர்கள்' என்று எதையும் குறிப்பிடப்படாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என்று ஆர்எஸ்எசிடம் பாஜக யோசனை தெரிவித்துள்ளது.
இதை ஆர்எஸ்எஸ் ஏற்குமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் முற்பட்ட ஜாதியினர் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும் தேவையில்லை என்கிறது பாஜக.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்று பாஜக மீது பழியைப் போட்டுவிட்டு ஜாதிவாரி சென்ஸஸ் விவகாரத்தை காங்கிரஸ் கிடப்பில் போட்டாலும் ஆச்சரியமில்லை.