'பெண்களால் பாதிக்கப்பட்டும் ஆண்கள் நலனுக்கு தனி அமைச்சர் தேவை'
மனைவியால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் ஒருங்கிணைந்து இந்திய குடும்ப பாதுகாப்பு என்ற அமைப்பை கடந்த 2005-ம் ஆண்டு ஏற்படுத்தினார்கள்.
இந்த அமைப்பின் 3-வது மாநாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, அசாம், சத்தீஸ்கார், மேற்கு வங்காளம், டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டார்கள்.
மாநாட்டில் கலந்து கொண்டு பேசியவர்கள், மனைவிகளால் தாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம், சிரமத்திற்குள்ளானோம் என்பதை குமுறலுடன் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:
- அரசின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண் மற்றும் பெண் என்று வருகிறதோ அதை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன் மற்றும் மனைவி என்று வருகிறதோ அதை துணை என்றும் மாற்ற வேண்டும்.
- ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால் அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க முடிவெடுப்பது.
- குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும்.
- ஆண்கள் நலம், பிரச்சினைகள், உரிமைகளுக்கு தீர்வு காண ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.
- குழந்தை வளர்ப்பில் ஆண், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
பின்னர் அகில இந்திய ஆண்கள் நல சங்கத்தின் தேசிய உறுப்பினர் சுரேஷ்ராம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எங்களின் அமைப்பு குடும்ப அமைப்பை காப்பாற்றவும், ஆண்கள் நலனை பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஏற்காட்டில் நடந்த 2 நாள் மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஆண்கள் நலனில் அக்கறை கொண்ட 22 அமைப்புகள் பங்கேற்றன. எங்களின் அமைப்பில் வெளி நாட்டு வாழ் இந்தியர்களும், சாப்ட்வேர் என்ஜினீயர்களும் அதிகமாக உள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 498 ஏ என்ற பிரிவை பெண்கள் சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் மன ரீதியில் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள்.
அதே போல குடும்ப வன்முறை சட்டத்தையும் சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமண விழாவில் தாலி கட்டுவதற்கு முன்பு மணப்பெண் திருமணத்தை நிறுத்தி விட்டால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதே வேளையில் மாப்பிள்ளை சென்று விட்டால் அவர் கைது செய்யப்படுகிறார்.
அதே போல குழந்தை பிறந்த பிறகு கணவன் - மனைவி பிரிந்தால் குழந்தை தாயிடம் வளர சட்டமும், தந்தை ஒரு மணி நேரமே பார்க்க அனுமதியும் வழங்கப்படுகிறது. சம உரிமை என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் அனைத்து விஷயங்களிலும் கொடுக்க வேண்டும்.
இந்தியாவில் ஒரு ஆண்டில் ஆண்களில் 60 ஆயிரம் பேரும், பெண்களில் 32 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் இருந்தே ஆண்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வரும் என்றார்.