For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காமன்வெல்த் போட்டியின்போது நான் பாரீன் போய்டுவேன்-மணிசங்கர ஐயர்

Google Oneindia Tamil News

Manishankar
பாலக்காடு: காமன்வெல்த் போட்டி நடக்காமல் நாசமாக போனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய மணிசங்கர ஐயர் தற்போது போட்டி நடைபெறும் காலத்தில் நான் இந்தியாவிலேயே இருக்க மாட்டேன், வெளிநாடு போய் விடுவேன் என்று கூறி மறுபடியும் டென்ஷனைக் கிளப்பியுள்ளார்.

காமன்வெல்த் போட்டியை கடுமையாக எதிர்த்து வருகிறார் ஐயர். போட்டி நடக்காமல், நாசமாகப் போனால் என்னை விட யாரும் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள் என்று கூறி சுரேஷ் கல்மாடிக்கு கடும் கடுப்பைக் கொடுத்தார். மத்திய அரசும் ஐயர் பேச்சால் அதிருப்தி அடைந்தது.

இந்த நிலையில் தனது தாக்குதலை தொடர்ந்துள்ளார் ஐயர். போட்டி நடைபெறும் காலகட்டத்தில் நான் இந்தியாவிலேயே இருக்க மாட்டேன், வெளிநாடு போய் விடுவேன் என்று கூறியுள்ளார் ஐயர்.

தனது நண்பரான சசி தரூரின் கல்யாணத்தில் (இது தரூருக்கு 3வது கல்யாணம், சுனந்தாவுக்கு 2வது கல்யாணம்) பங்கேற்பதற்காக பாலக்காடு வந்திருந்தார் ஐயர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா போன்ற வளரும் நாடுகள் காமன்வெல்த் போட்டிகள் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்த இது உகந்த காலம் அல்ல. இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையை எவ்வளவோ மேம்படுத்த வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் சங்கங்களும் தனியார்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளன. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச தரத்தில் விளையாட்டுக் களங்கள், பயிற்சி சாதனங்கள், விளையாட்டுக் கருவிகள் எல்லாம் வாங்கித் தருவது அவசியம். விளையாட்டு வீரர்களை விருப்பு, வெறுப்பு அடிப்படையில் தேர்வு செய்யாமல் உண்மையான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களைத் தேர்வு செய்து உள்நாட்டு, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களைக் கொண்டு இடைவிடாமல் பயிற்சி அளித்து ஊக்குவித்தால் அவர்கள் சர்வதேச அரங்கில் வெற்றிகளைக் கொண்டுவந்து குவிப்பார்கள்.

விளையாட்டுகளையும் விளையாட்டு சங்கங்களையும் பணம் சம்பாதிப்பதற்காகவும் தங்களுடைய சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்துகிறவர்களிடம் விட்டுவைக்காமல் அரசே தன் வசம் மேற்கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால்தான் சீனாவைப்போல ரஷியாவைப் போல விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போதே நாமும் உலக அரங்கில் கெளரவமாக சொல்லிக் கொள்ளும் வகையில் ஏராளமான தங்க, வெள்ளி பதக்கங்களைக் குவிக்க முடியும். வெறும் வியாபார நோக்கத்துக்காக போட்டிகளை நடத்தினால் நமக்கு என்ன கெளரவம் கிடைக்கும்.

இந்தியாவில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்த காலம் கனியவில்லை என்று நான் கூறியது இவற்றையெல்லாம் மனதில் வைத்துத்தான். நம்முடைய நாடு பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் வளர்ச்சியில் பெருத்த இடைவெளி காணப்படுகிறது. இந்த நிலையில் கிராமங்களை முன்னேற்ற அடித்தள கட்டமைப்புக்கு அரிதாகக் கிடைக்கும்
நிதி வசதியை ஒரேயொரு நகரின் விளையாட்டு அரங்குகளுக்காகச் செலவிடுவது எந்த வகையிலும் சரியில்லை என்பதாலேயே நான் எதிர்த்தேன்.

விளையாட்டுத் துறையை அரசே மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தேன். இப்போது விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைக்கவும் நடத்தவும் கண்காணிக்கவும் அரசே மிகப்பெரிய குழுவை
நியமித்திருப்பது ஓரளவுக்கு நிம்மதியைத் தருகிறது.

ஊழல் செய்தவர்கள் தப்ப முடியாது, தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் கூறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இப்போது தொடங்கியுள்ள விசாரணை முடியும்வரையில் நாம் காத்திருப்போம். விளையாட்டு அரங்குகளைப் பராமரிக்கும் பொறுப்பை ராணுவத்திடம் விட வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டியவர் பாதுகாப்புத்துறை அமைச்சரான ஏ.கே. அந்தோனிதான், நான் எதையும் கூறுவதற்கில்லை என்றார் ஐயர்.

'ஐயர்'னாலே இப்படித்தான்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X