கோலார் தங்கச் சுரங்கத்தில் 30 லட்சம் டன் தங்கம்-மீண்டும் செயல்படும் வாய்ப்பு அதிகரிப்பு
உலகிலேயே மிகவும் ஆழமான 2வது தங்கச் சுரங்கம் கோலார் தங்கச் சுரங்கம். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இது உள்ளது. கடந்த 121 ஆண்டுகளாக இது செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்திலிருந்து தங்கம் வெட்டியெடுக்கும் பணியில் தமிழர்கள் பெருமளவில் ஈடுபட்டு வந்தனர். முழுக்க முழுக்க தமிழர்களே இங்கு தங்கத்தை வெட்டியெடுத்து வந்தனர். கடந்த 2001ம் ஆண்டு இந்த சுரங்கம் நலிவடைந்து விட்டதாக கூறி மூடி விட்டனர்.
இந்த நிலையில் 30 லட்சம் டன் தங்கம் இன்னும் அங்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்னும் 15 ஆண்டுகளுக்கு இங்குதங்கம் தோண்டியெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோலார் தங்கச் சுரங்கத்திற்கு மீண்டும் புதுவாழ்வு கிடைக்கவுள்ளது.
கடந்த 1994, 97 மற்றும் 2000மாவது ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மூன்று நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இதுதொடர்பான ஆய்வை முடித்து தற்போது அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. அதில், 30 லட்சம் டன் தங்க படிவுகள் இன்னும் தோண்டியெடுக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த சுரங்கத்தை மீண்டும் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து பாரத் கோல்ட்மைன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் முன்னாள் சுரங்கப் பிரிவு மேலாளர் ஆனந்தராஜ் இதுகுறித்துக் கூறுகையில், இன்னும் ஏராளமான தங்கப் படிவுகள் உள்ளன. ஆனால் சுரங்கத்தைப் புதுப்பிக்கும் பணிகளை தொடங்க அரசு காலதாமதம் செய்து வருகிறது என்றார்.
இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளரும், கோலார் தங்கச் சுரங்க ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தின் தலைவருமான திவாகரன் கூறுகையில், பல குழுக்கள் சுரங்கத்திற்கு உயிரூட்டும் முயற்சிகள் தொடர்பாக ஆரம்பிக்கபப்ட்டன. இதுகுறித்த அறிக்கைகளும் கூட சுரங்கத்தை தொடர்ந்து செயல்படுத்த பரி்ந்துரைத்துள்ளன.ஆனால் பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது என்றார்.
2005ல் அமைக்கப்பட்ட பி.சி. குப்தா கமிட்டி சுரங்கத்தில் 13.72 லட்சம் டன் தங்கப் படிவுகள் இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அறிக்கைகள் மூலம் கோலார் தங்கச் சுரங்கம் மீண்டும் மின்னும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சுரங்கப் பகுதியில் வைத்துதான் தனுஷ்,சாயாசிங் நடித்த திருடா திருடி படத்தில் வரும் மன்மத ராசா பாடல் காட்சியைப் படமாக்கினர் என்பது நினைவிருக்கலாம்.